Appam, Appam - Tamil

மே 12 – உங்களுக்கு அதிகாரங்கள்!

“என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் (யோவா. 14:12).

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் செய்த கிரியைகள் அனைத்துமே மகா வல்லமையானவை. அவர் பிசாசுகளைத் துரத்தினார், நோய்களை குணமாக்கினார், குஷ்டரோகிகளை சொஸ்தமாக்கினார், மரித்தோரை எழுப்பினார் மற்றும் பலத்த அற்புதங்களைச் செய்தார்.

நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எல்லா நாமத்துக்கும்மேலான நாமத்தையும், எல்லா வல்லமைகளுக்கும்மேலான வல்லமையையும், எல்லா அதிகாரத்துக்கும்மேலான அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது (மத். 28:18).

வேதம் சொல்லுகிறது, “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி. 2:9-11).

அவ்வளவு அதிகாரமும் வல்லமையும் படைத்த ஆண்டவர் நம்மைப் பார்த்து அன்போடு, ‘என் பிள்ளைகளே, நீங்கள் என்னை விசுவாசித்தால் நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்’ என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார்.

ஆம், நாம் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களுக்கு அற்புதங்களைச் செய்து ஆறுதலையும், தேறுதலையும் கொண்டுவரவேண்டும். அவர்களுடைய பிரச்சனைகளை மாற்றி, அவர்களுடைய கண்ணீரைத் துடைக்கவேண்டும்.

ஜனங்களின் நோய்களைக் குணமாக்கவும், அவர்களுடைய துயரத்துக்குப்பதிலாக ஆனந்த தைலத்தைக் கொடுக்கவும் தமது பிரதிநிதிகளாய் கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். அதற்காகவே வரங்களையும், வல்லமைகளையும், அதிகாரங்களையும் தந்திருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” (யாக். 1:17).

பரலோகத்தின் தேவன் உங்களுக்கு அவ்வளவு பெரிய கிருபை வரங்களைத் தர நினைத்திருக்கும்போது, உங்களைக்குறித்து மேன்மையான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள் அவருக்காக எழும்பிப் பிரகாசிக்கவேண்டுமல்லவா? அவர் கொடுக்கிற வரங்களையும், அதிகாரங்களையும் பெற்று செயல்படுத்த வேண்டுமல்லவா?

இந்த உலகம் தேவைகள் நிறைந்த உலகம். வறண்ட நிலம்போல அது காணப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் வாடிப்போய் கிடக்கிற பயிர்களைப்போல காணப்படுகிறது. மறுபக்கத்தில் கர்த்தரோ எல்லா நன்மைக்கும், ஆசீர்வாதத்துக்கும் ஊற்றுக்காரணராய் பெரிய குளம்போல காணப்படுகிறார். தேவபிள்ளைகளே, அந்த பெரிய குளத்தையும், வறண்ட நிலத்தில் உள்ள பயிர்களையும் இணைக்கிற கால்வாயாக நீங்கள் செயல்படும்போது அநேக ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறவர்களாய் இருப்பீர்கள்.

நினைவிற்கு:- “அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்” (1 கொரி. 14:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.