No products in the cart.
ஜனவரி 25 – புதிய மனுஷன்!
“மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபே. 4:24).
புதிய ஆண்டிலும் எல்லாவற்றையும் புதிதாக்குகிற நம் அருமை ஆண்டவர், நம்மை அன்போடு நோக்கிப் பார்த்து, “புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று ஆலோசனை கூறுகிறார். மெய்யான நீதியிலும், பரிசுத்தத்திலும் தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்டவனே அந்தப் புதிய மனுஷன்.
இந்த புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வதற்கு பழைய மனுஷனைக் களைத்துபோடவேண்டியது அவசியம். அதைத் குறித்து, அப். பவுல், “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, புதிய மனுஷனை தரித்துக்கொள்ளுங்கள்” (எபே. 4:22-24) என்று எழுதுகிறார்.
இந்தப் புதிய மனுஷன் என்பது, ஆவிக்குரிய ஜீவியத்திலுள்ள உள்ளான மனுஷனைக் குறிக்கிறது. ஜெபிக்கும்போதும், வேதம் வாசிக்கும்போதும், ஊழியம் செய்யும்போதும் அந்த உள்ளான மனுஷன் பலம் உள்ளவனாய், வல்லமையுள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பாவம் செய்யும்போது காற்றுப்போன பலூன்போல மாறிவிடுகிறான்.
பிசாசோ அல்லது சாத்தானோ வெளியரங்கமான மனுஷனுடைய பலத்தைக் குறித்தோ, அவனுடைய செல்வத்தைக் குறித்தோ கொஞ்சமும் பயப்படுவதில்லை. சாத்தான் நடுங்குவதெல்லாம் நம்முடைய உள்ளான மனுஷனைக் குறித்துத்தான். ஆகவேதான் அப். பவுல், நீங்கள் உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட வேண்டுமென்று ஆலோசனை கூறுகிறார் (எபே. 3:16).
ஒருமுறை ஒரு வயதான தேவ ஊழியர் ‘வயது முதிர்ச்சியினாலே என் சரீரத்திலே பலவித பெலவீனங்கள் காணப்பட்டாலும், ஆவியிலே உள்ளான மனுஷனாலே நான் பலத்தோடு, உற்சாகத்தோடு இருக்கிறேன்’ என்றார்.
ஒருநாள் ஆண்டவர், அவருக்குள்ளிருந்த உள்ளான மனுஷனை அவருக்குக் காண்பித்தார். அந்த உள்ளான மனுஷன் இளமையாகவும், பலசாலியாகவும், மட்டுமல்லாமல் கிறிஸ்துவின் சாயலிலும் இருந்ததைக் கண்டபோது அவருக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
கர்த்தருடைய வருகையிலே அந்த உள்ளான மனுஷன்தான் மறுரூபமாகி கிறிஸ்துவுக்கு ஒப்பாக இருப்பான். ஆகவே அப்போஸ்தலனாகிய பவுல் கொலொசேயருக்கு எழுதும்போது, “தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே” (கொலொ. 3:10) என்று குறிப்பிட்டார்.
தேவபிள்ளைகளே, நம்முடைய மாம்சமும், இரத்தமும் ஒருநாளும் பரலோகத்தை சுதந்தரிக்கமாட்டாது. பரலோகத்தை சுதந்தரிப்பதெல்லாம் நம்முடைய உள்ளான மனுஷன்மட்டுமே. ஆகவே உங்களுடைய உள்ளான மனுஷனிலே நீங்கள் வல்லமையாய் பலப்படவேண்டியது அவசியம். “எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்” என்று (ஏசா. 52:1) ஏசாயா தீர்க்கதரிசி முழங்குகிறார்.
நினைவிற்கு:- “நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,…….உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்” (எபே. 3:16,19).