AppamAppam - Tamil

பிப்ரவரி 11 – உத்தமம்!

“உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்” (நீதி.10:9).

நாம் உண்மையும் உத்தமுமாய் இருக்க வேண்டும் என்கிற கருத்தானது, நீதிமொழிகளின் புஸ்தகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. உத்தமம் என்றால் என்ன? பொதுவாக உத்தமம் என்ற வார்த்தை உண்மையோடு இணைந்து வருகிறது. அது, முழுமையாக நம்பப்படத்தக்கதும், அப்பழுக்கற்றதுமான ஒரு குணாதிசயம். பொய்யோ, புரட்டோ இல்லாத மேன்மையான குணாதிசயம். அது நேர்மையையும் நீதியையும் விளங்கச் செய்கிறது.

உத்தமமாய் இருக்கிறவர்களிடத்திலே தரமான நற்கனிகளைக் காணலாம். அவர்கள் மற்றவர்களை ஒருபோதும் வஞ்சிக்கவோ, ஏமாற்றவோமாட்டார்கள். ஆகவே ஞானமுள்ளவர்களாய் விளங்குகிறவர்கள் எப்போதும் எல்லாக் காரியங்களிலும் உத்தமர்களாய் நடப்பார்கள்.

கர்த்தர் ஒவ்வொருவரிடத்திலும் இந்த உத்தம குணத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார். நோவா தன் காலத்திலுள்ள எல்லா ஜனங்களின் மத்தியிலும் உத்தமராய் வாழ்ந்து வந்தார். ஆகவேதான் நோவாவுக்கு கர்த்தருடைய கண்களிலே கிருபை கிடைத்தது (ஆதி. 6:8). மற்றவர்கள் எல்லாரும் பாவத்திலும், அக்கிரமத்திலும் ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நினைவுகள், செய்கைகள் நித்தமும் பொல்லாதவையாய் இருந்தன.

ஆகவே கர்த்தர் அவர்களை அழிக்கத் தீர்மானித்தபோது, உத்தமனாயிருந்த நோவாவை மட்டும் பேழைக்குள் பாதுகாத்துக்கொண்டார். அதுபோலவே, கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, “நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு” என்று சொன்னார் (ஆதி. 17:1).

சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக வாழுகிறவர்களால் உத்தமமாய் ஜீவிக்க முடியாது. போதிக்கிற பலர் அந்த போதனைகளைக் கடைப்பிடிப்பதில்லை. காரணம் அவர்களில் உத்தமம் இல்லை. பல திருமணங்களை ஒழுங்கு செய்து கொடுக்கிற ஒருவருடைய மணவாழ்க்கையோ மகா தோல்வியாய் அமைந்தது. பல குடும்பங்களை அவர் இணைத்து வைத்தார். ஆனால் அவர் குடும்பமோ சிதைந்து போயிற்று. காரணம் அவரிடம் உத்தமம் இல்லை.

பல மனநோய் மருத்துவர்களே தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் தற்கொலை செய்துகொள்ளுகிறார்கள். பல பொருளாதார நிபுணர்களே தங்கள் வாழ்க்கையில் பொருளாதாரப் பற்றாக்குறையுடன் வசதியில்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் உண்மையும் இல்லை, உத்தமமும் இல்லை என்பதே இதற்குக் காரணம். எவ்வளவு படித்திருந்தாலும் அவர்களுக்கு உத்தமம் கண்டிப்பாகத் தேவை. அப்படி உத்தமம் இருந்தால்தான் நீங்கள் அவர்களை நம்பிச் சார்ந்துகொள்ள முடியும்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கை உறுதியான தூண் போன்றதாக இருக்க வேண்டுமா? மனுஷருக்கு முன்பாகவும் ஆண்டவருக்கு முன்பாகவும் உண்மையும் உத்தமுமாய் வாழத் தீர்மானியுங்கள். உங்கள் உத்தம நடத்தையே உங்கள் வாழ்க்கையை உறுதிப்படுத்தும்.

நினைவிற்கு:- “உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்” (உபா. 18:13)

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.