Appam, Appam - Tamil

அக்டோபர் 02 – மலைக்கு ஓடிப்போ!

“இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ” (ஆதி. 19:17).

சோதோம் கொமோராவுக்கு அழிவு என்பது கர்த்தரால் நியமிக்கப்பட்டிருந்தது. சோதோம் அழிக்கப்படுவதற்கு முன்பு, கர்த்தர் அங்கே இருந்த நீதிமானாகிய லோத்துவையும், அவனுடைய குடும்பத்தையும் காப்பாற்றவேண்டுமென்று நினைத்தார். ஆனால் அவர்களோ சோதோமைவிட்டு வெளியேற விருப்பமில்லாமல், தாமதித்துக் கொண்டிருந்தார்கள்.

சோதோமை அழிக்க வந்த புருஷர் லோத்தின் கையையும், அவனுடைய மனைவியின் கையையும், அவனுடைய இரண்டு பிள்ளைகளின் கையையும் பிடித்து பட்டணத்திற்கு வெளியே கொண்டுவந்துவிட்டார்கள். வேதம் சொல்லுகிறது: “உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்” (ஆதி. 19:17). மலையில்தான் உங்களுக்கு பாதுகாப்பு உண்டு. அடைக்கலம் உண்டு. அங்குதான் உன்னதமானவரின் மறைவு உண்டு. சர்வ வல்லவரின் நிழல் உண்டு.

இன்றைக்கும் உங்களைப் பார்த்து ‘மலைக்கு ஓடிப்போங்கள்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். அது எந்த மலை? அதுதான் கல்வாரி மலை. அங்குதான் மனிதனுடைய பாவ பாரங்களை தன்மேல் ஏற்றுக்கொண்டு பலியான கிறிஸ்துவின் சமுகம் இருக்கிறது. அங்குதான் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் இருக்கிறது. அங்குதான் பாவ மன்னிப்பின் இரட்சிப்பும், சந்தோஷமும் உண்டாகின்றன. அங்குதான் பரிசுத்தமே ஆரம்பமாகிறது.

தம்மண்டை வருகிற ஒருவரையும் புறம்பே தள்ளாத ஆண்டவர், கல்வாரி மலையில் உங்களையும் அரவணைத்துக்கொள்ளுவார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்று அவர் அன்போடு அழைக்கிறார். பாவம் மன்னிக்கப்பட கிறிஸ்துவின் இரத்தமேயல்லாமல் வேறு ஒரு வழியுமில்லை. இரட்சிக்கப்பட இயேசுகிறிஸ்துவின் நாமமே அல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை. ஆகவே, கொல்கொதா மேட்டிற்கு வாருங்கள். கல்வாரி மலையை நோக்கிப்பாருங்கள்.

முள்முடி சூட்டப்பட்டு, ஆணிகளால் கடாவப்பட்டு, அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு கல்வாரிச் சிலுவையிலே தொங்குகிற இயேசுவை நோக்கிப்பாருங்கள். வேதம் சொல்லுகிறது, “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5). இந்த சமபூமியில் எங்கும் நிற்காதிருங்கள். ‘சமபூமி’ என்பது இளைப்பாறுதலையும், ஓய்வையும், சுகபோகமான ஜீவியத்தையும் காண்பிக்கிறது. சோதோமுக்கு வந்த அழிவு சமபூமியிலும் பரவக்கூடும்.

இஸ்ரவேல் ஜனங்கள் கானானைப் பிடித்தபோது, காலேபின் உள்ளம் சமவெளியில் ஓய்வுபெற விருப்பம் கொள்ளவில்லை. அவர் யோசுவாவைப் பார்த்து, ‘அந்த மலைநாட்டை எனக்குத் தாரும். அங்கே உள்ள ஏனாக்கியரை நான் துரத்திவிடட்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். மலைநாட்டை சுதந்தரிக்கிற வரையிலும் அவர் ஓய்ந்துவிடவில்லை.

தேவ பிள்ளைகளே, உங்களுடைய உள்ளம்கூட எல்லா நேரத்திலும் கல்வாரி மலையையே நாடட்டும்.

நினைவிற்கு:- “நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்… வந்து சேர்ந்தீர்கள்” (எபி. 12:22,24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.