No products in the cart.
மே 28 – அறிவாகிய பொக்கிஷம்!
“அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது” (கொலோ. 2:3).
இயேசு கிறிஸ்துவுக்குள்ளிருக்கும் ஞானம், அறிவு என்கிற சகல விலையேறப்பெற்ற பொக்கிஷங்களையும் அவர் தமக்குச் சித்தமானவனுக்குக் கொடுக்கிறார். கர்த்தர் ஒருவரே மனுஷருடைய எண்ணங்கள், தோற்றங்கள், நினைவுகள், செயல்கள் என எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.
அப்.பவுல், கர்த்தரின் ஞானம், அறிவு, என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது என்று சொல்லி மிகவும் ஆச்சரியப்பட்டார் (ரோமர் 11:33). நீங்கள் தாகத்தோடிருந்தால், கர்த்தர் உங்களுக்குத் தேவைப்படும் அறிவை நிச்சயமாய் தந்தருள்வார்.
இன்றைக்கு மனிதனுடைய அறிவு மிகவும் பெருகிவிட்டது (தானி.12:4). விமானங்களும், ராக்கெட்டுகளும், விண்வெளிப் பயணங்களும், கணினி குறித்த அறிவுகளும், உலகத்தைப் பிரமிக்கச்செய்கின்றன. அதே நேரம், சில தீய அறிவுகள் மனிதனை ஆபத்தான, அழிவின் பாதையிலே கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றன.
ஆனால் கர்த்தரோ, தம்முடைய பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய அறிவைத் தந்தருளுகிறார். நித்தியத்திற்குரிய, பரலோக அறிவைத் தந்தருளுகிறார். இந்த அறிவை உலக ஞானி ஒருவனும் அறியமாட்டான். கர்த்தர் தருகிற இந்த அறிவாகிய பொக்கிஷம் ஆறு விதங்களிலே உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்.
முதலாவது, கர்த்தரைப்பற்றிய அறிவு. இரண்டாவது, வேதத்தின் ஆழங்களையும், இரகசியங்களையும் அறியும் அறிவு. மூன்றாவது, உங்களை நீங்களே அறிகிற அறிவு. நான்காவது, ஆவிக்குரிய நிலவரங்களைப் பற்றிய அறிவு. ஐந்தாவது, ஒரு மனிதனைப்பற்றிய, ஒரு இடத்தைப்பற்றிய, ஒரு சூழ்நிலையைப் பற்றிய அறிவு. ஆறாவது, பரலோகத்தை பற்றியும், பாதாளத்தைப்பற்றியும், ஆவிகளின் உலகத்தைப்பற்றியும் அறிகிற அறிவு. இந்த அறிவுகளெல்லாம் மகா விலையேறப்பெற்றப் பொக்கிஷங்களல்லவா?
வேதம் சொல்லுகிறது, “கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்” (நீதி. 28:5). பெரிய நற்செய்திப் பெருவிழாக்களில், பிரச்சனையுள்ளவர்களையும், வியாதியுள்ளவர்களையும் பெயர்சொல்லி அழைப்பதும், அவர்களுக்கு இருக்கிற பிரச்சனைகள், வியாதிகள் பற்றி தீர்க்கதரிசனமாகச் சொல்லி ஜெபிப்பதும் இந்த பரலோக அறிவினால்தான்.
தேவபிள்ளைகளே, பல நபர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கக்கூடும். இவர் எப்படிப்பட்டவர், என்ன நோக்கத்தோடு வந்திருக்கிறார், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவரா, நல்லவர்போல நடித்து உள்ளத்திலே வஞ்சனையை வைத்திருக்கிறவரா என்பதையெல்லாம் இந்த அறிவாகிய பொக்கிஷம் உங்களுக்கு உணர்த்திவிடும். வேதம் சொல்லுகிறது, “மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் (இயேசு) அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை” (யோவான் 2:25).
நினைவிற்கு:- “…..ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்” (தானி. 2:21, 22).