Appam, Appam - Tamil

மே 26 – அறிகிற அறிவுக்காக!

“என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக” (பிலி. 3:8).

இந்த கடைசி நாட்களில் அறிவு பெருகிப்போகும் என்று தானியேல் தீர்க்கதரிசி கூறுகிறார் (தானி. 12:4). மனிதர்கள் ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரிப் படிப்பு, தொழில்முறைப் படிப்புகளான வைத்தியப்படிப்பு, சட்டப்படிப்பு என்று ஏராளமான படிப்புகளை உலக அறிவைப் பெற்றுக்கொள்ளுவதற்காகப் படிக்கிறார்கள். வைத்தியப் படிப்புக்காக பல லட்ச ரூபாய்களை தியாகம் செய்ய ஆயத்தமாய் இருக்கிறார்கள். ஆனால் இந்த அறிவுகள் எதுவும் எந்த மனுஷனையும் பரலோகத்தில் கொண்டுபோய் சேர்க்க உதவாது.

அப். பவுல், “கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மைக்காக” என்று எழுதுகிறார். இந்த அறிவிலே ஒரு மேன்மையிருக்கிறது, மகிமையிருக்கிறது, நித்திய மகிழ்ச்சியிருக்கிறது. ஆம், பிதாவையும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகிற அறிவே நித்திய ஜீவன். ஒரு மனுஷனுக்கு எந்த அறிவு இல்லாமல் போனாலும் கர்த்தரைப்பற்றி அறிகிற அறிவு நிச்சயமாகத் தேவைப்படுகிறது. அப்போதுதான் அவனால் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கர்த்தரை அறிகிற அறிவினால் வரும் ஆசீர்வாதங்கள் என்ன? முதலாவது, “அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள்” என்று பேதுரு குறிப்பிடுகிறார் (2 பேதுரு 2:20). கிறிஸ்துவை அறிகிற அறிவு முதலாவதாக உலகத்தின் அசுத்தங்களுக்கு உங்களைத் தப்புவிக்கிறது. அதோடுகூட உங்களை நீதிமானாக்குகிறது (ஏசா. 53:11).

இரண்டாவது, “தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது” (2 பேதுரு 1:2) என்று மீண்டும் பேதுரு எழுதுகிறார். கிறிஸ்துவிலே கிருபையும் சமாதானமும் உண்டு. அவரை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாய் அறியவேண்டும் என்று உங்களுடைய இருதயத்தை ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அந்த கிருபையும், சமாதானமும் உங்களிலே பெருகிக்கொண்டே இருக்கும், நிரம்பி வழிந்துகொண்டேயிருக்கும்.

மூன்றாவது, அவருடைய திவ்விய வல்லமையைப் பெற்றுக்கொள்ளுகிறீர்கள். “நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவ பக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி……” (2 பேதுரு 1:3) என்று பேதுரு எழுதியிருப்பதைப் பாருங்கள். கர்த்தருடைய திவ்விய சுபாவத்திற்கு நீங்கள் பங்குள்ளவர்களாய் மாறும்படி கர்த்தரை அறிகிற அறிவு உங்களுக்கு அவசியம்.

பேதுரு எழுதின முதல் இரண்டு நிருபங்களை நீங்கள் வாசித்துப்பார்த்தால் அதிலே கிறிஸ்துவை அறிகிற அறிவின் நிமித்தம் வரும் இன்னும் பல ஆசீர்வாதங்களைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறதைக் காணலாம்.  தேவபிள்ளைகளே, கர்த்தரைக்குறித்து அதிகமாய் அறிந்துகொள்ள உங்கள் இருதயத்தை ஒப்புக்கொடுங்கள். கர்த்தருடைய வசனத்தை பசிதாகத்தோடும், வாஞ்சையோடும் கேட்டு ஏற்றுக்கொள்ளுங்கள். கர்த்தருடைய ஆவியானவர் வேதத்தின் மகத்துவங்களை வெளிப்படுத்தும்படி உங்களைத் தாழ்த்தி அவரிடத்தில் ஒப்புக்கொடுங்கள்.

நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” (2 பேது. 3:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.