No products in the cart.
மே 24 – விவேகியும், ஆபத்தும்!
“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (நீதி. 22:3).
பேதைகள் ஆபத்துகளில் புத்தியீனமாக சிக்கிக்கொள்ளுகிறார்கள். தங்கள் கால்களுக்கு விரித்திருக்கும் வலைகளையும், கொடிய கண்ணிகளையும் அறியாமல் நடந்து அவதியுறுகிறார்கள். ஞானமாய் நடக்காமல், அறியாமையிலே நடக்கிறார்கள். ஆனால் விவேகியோ ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான். எதிரிகளுடைய கண்ணிகளுக்குத் தப்பி பாதுகாப்பாய் இருக்கிறான்.
மறைந்துகொள்ளும் அனுபவம் விவேகியின் அடையாளம். சிலர் பேரையும், புகழையும் விரும்பி ஆபத்திலே சிக்கிக்கொள்ளுகிறார்கள். பாருங்கள், இயேசு கிறிஸ்துவை ஒரு கூட்டத்தினர் பிடித்து ராஜாவாக்கவேண்டுமென்று முயற்சித்தார்கள். மறுபக்கத்தில் யூதர்கள் அவரைப் பிடித்து கொலை செய்ய வகை தேடினார்கள். இரண்டு பக்கமும் ஆபத்துதான்.
கர்த்தர் செய்தது என்ன? அவர்கள் மத்தியிலிருந்து மறைந்து போய்விட்டார். எந்த நேரத்தில் மறைந்து வாழவேண்டுமென்பதை விவேகி அறிந்திருக்கிறான். அப்படி இயேசு மறைந்து கொண்டபடியினால்தான் அவருடைய ஊழியத்தை வெற்றியோடு முடித்தார்.
எலியாவைப் பாருங்கள், ஆகாப் ராஜாவுக்கு நேர்முன்னாக நின்று சவால்விட்டு என்னுடைய வாக்கின்படியே அன்றி இந்த நாட்களில் பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று முழங்கினார் (1 இராஜா. 17:1). அதே நேரம் தேவன் கொடுத்த விவேகத்தினால் கேரீத் ஆற்றண்டையில் மறைந்தும் ஒளிந்தும் வாழ்ந்தார். மறைந்து வாழும் இந்த வாழ்க்கை கர்த்தரிலே பெலப்படுவதற்கு உதவியாய் இருந்தது. அப்படிப்பட்ட மறைந்த ஜீவியத்தை கர்த்தர் விரும்பினதால் காகங்கள் மூலமாக எலியாவைக் கர்த்தர் போஷித்தார்.
சிலர் மறைந்து வாழப் பிரியப்படுவதில்லை. மனுஷர் காணவேண்டுமென்று பகட்டோடும், பெருமையோடும், விளம்பரங்களோடும் வாழவேண்டுமென்று நினைக்கிறார்கள். மனுஷர் காணவேண்டுமென்று தானதர்மங்களைச் செய்கிறார்கள். மனுஷர் காணவேண்டுமென்று ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும், சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ணவேண்டுமென்று எண்ணுகிறார்கள். மனுஷர் காணவேண்டுமென்று தங்களுடைய உபவாசத்தை விளம்பரம் செய்கிறார்கள்.
இயேசு சொன்னார், “நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்” (மத். 6:17,18).
விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான். மறைந்துகொள்ளுவதினால் சில ஆபத்துக்களுக்குத் தப்ப வழி கிடைக்கிறது. இச்சையடக்கத்தின் மூலமாகவும், ஆபத்துக்கு விலகி ஓடலாம். தூண்டிலில் புழு கோர்க்கப்பட்டிருக்கையில், மீன்கள் அந்தப் புழுவையே நோக்குமே தவிர பின்னால் தங்களுக்கு வரவிருக்கிற ஆபத்தைக் குறித்து எண்ணாது.
ஆனால் இச்சையடக்கம் உடைய மனுஷன் தூண்டிலைக் கவனிக்கிறான். தேவனுடைய கோபாக்கினையை நினைவு கூருகிறான். பாவத்துக்கும், சாபத்துக்கும் தன்னை விலக்கிக் காத்து மறைந்துகொள்ளுகிறான்.
நினைவிற்கு:- “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” (நீதி.14:15).