Appam, Appam - Tamil

மே 14 – கார்மேகத்தில்!

“கர்த்தர் மோசேயை நோக்கி: …… நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார்” (யாத்.19:9).

கார்மேகத்திலிருந்து ஓர் ஆசீர்வாதம் வருகிறது. காரிருளாகிய அந்தகாரத்திலிருந்தும் ஓர் ஆசீர்வாதம் வருகிறது. இருண்ட சூழ்நிலையிலும் கர்த்தர் புதிய வெளிச்சத்தை உருவாக்க வல்லமையுள்ளவர். அவர் காரிருள் சூழ்ந்த உலகத்தில் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் சிருஷ்டித்தவர் அல்லவா?

காரிருள் போன்ற சோதனை நேரங்களில், கர்த்தர் ஆச்சரியமாய் உங்களுக்குத் தன் வழியைத் திறந்து கொடுத்து, உங்களைத் திடப்படுத்தி பலப்படுத்துவது, கிறிஸ்தவ மார்க்கத்தில் மிக ஆசீர்வாதமான ஓர் அனுபவமாகும். கண்ணீரின் பாதைகளும், போராட்டத்தின் பாதைகளும் உங்களைக் கிறிஸ்துவண்டை மிகச் சமீபமாய் கூட்டிச் சேர்க்கிறது. கிறிஸ்துவை நெருங்கி நடக்கிறவர்கள் அதை அறிவார்கள்.

செழுமையின் நாட்களிலும், பசுமையின் நாட்களிலும் நீங்கள் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்களைப் பார்க்கிலும், உபத்திரவத்தின் குகையிலேயும், காரிருளின் பாதைகளிலேயும் நீங்கள் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள் மிக மேன்மையானவை; மிக அருமையானவை. கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் கார்மேகத்தில் வருவேன்” என்று சொன்ன வார்த்தையை நினைவுகூருங்கள். உங்களுடைய மனக்கண்களுக்கு முன்பாக அந்த கார்மேகத்தில் கர்த்தர் தோன்றும் சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள்.

மின்னல்கள் பயங்கரமாய் பளிச்சிட்டு, இடி முழக்கங்கள் உள்ளத்துக்கு நடுக்கத்தைக் கொண்டுவரும்போது, கார்மேகங்களும் இருளை உண்டாக்கி நிலைமையை மோசமாக்குகின்றன. எல்லாப் பக்கங்களும் பாடுகளாலும், உபத்திரவங்களாலும் சூழ்ந்திருக்கிறதைப்போலத் தோன்றுகிறது.

ஆனால், “நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன். அந்தகாரத்தின் பொக்கிஷங்களை உனக்குக் கொடுப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்: எத்தனை அருமையான வாக்குத்தத்தம் இது!

ரிச்சர்டு உம்பிராண்ட் என்ற பக்தன், கர்த்தர்மேல் வைத்த விசுவாசத்திற்காக பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து தாங்கமுடியாத உபத்திரவத்தின் பாதையில் கடந்துசென்றார். அவர் “நான் சிறை அதிகாரிகளால் இரத்தம் பீறும்வகையில் அடிக்கப்பட்டு வேதனை அனுபவிக்கும்போது, நினையாத நாழிகையிலே கர்த்தர் அங்கே வந்து தன்னுடைய அன்பின் கரத்தினால் என்னை அரவணைத்து தேற்றுகிறதை உணர்ந்திருக்கிறேன். உபத்திரவ நேரத்தில் அவர் என்மேல் பாராட்டின அன்பு ஆயிரம் மடங்கு அதிகமாயிருக்கும்” என்று சொன்னார்.

தேவபிள்ளைகளே, கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்று மோசேயோடு சொன்ன ஆண்டவர், இன்றைக்கும் கார்மேகத்தைப்போல சூழ்ந்திருக்கும் உங்களுடைய உபத்திரவங்களின் மத்தியிலே வந்து, உங்களுக்கு ஆறுதல் செய்ய ஆவலோடிருக்கிறார். அவருடைய பிரசன்னமானது மேகம் மலையின்மேல் இறங்குவதுபோல உங்கள்மேல் இறங்குவதை நீங்கள் உணர முடியும்.

நினைவிற்கு:- “உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்” (ஏசா. 44:22).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.