No products in the cart.
மார்ச் 13 – பரலோக பாக்கியம்!
“நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத். 5:10).
ஒரு மனோதத்துவ நிபுணர் இவ்வாறு கூறினார்: “உன்னை நீயே மாற்றிக்கொள்ளலாம். உன்னை நீயே முன்னுக்குக் கொண்டுவரலாம். உன் உயர்வும் மேன்மையும் உன் கையில்தான் இருக்கிறது”. இன்னொரு தத்துவஞானி சொன்னார்: “ஒரு துன்மார்க்கன் நல்லவனாக மாறவேண்டுமென்றால் தினமும் காலையில் எழுந்தவுடன் கண்ணாடிக்கு முன் நின்று நான் தினமும் மாறிக்கொண்டிருக்கிறேன் என்று கூற வேண்டும். இப்படி தினந்தோறும் நான் மாறுகிறேன்; நான் நல்லவனாகிறேன் என்று சொல்வானேயானால் அவன் நிச்சயமாகவே நல்லவனாக மாறிவிடுவான்”.
இவர்களின் கூற்றுகளெல்லாம் வெளிப்பார்வைக்கு உண்மைபோல தோன்றுகின்றன. ஆனால் உண்மை என்ன தெரியுமா? நம்மை நாமே மாற்றமுடியாது. உளையான சேற்றிலிருந்து நம்மை நாமே தூக்கியெடுத்துவிட முடியாது. சாத்தானின் வல்லமையிலிருந்தும், பிசாசின் போராட்டங்களிலிருந்தும் நம்மை நாமே விடுவித்துக்கொள்ளமுடியாது. கிறிஸ்துதான் நம்மை மாற்ற முடியும். அவரே நம்மை கைத்தூக்கிவிடமுடியும்.
மனிதன் தன்னுடைய சொந்த முயற்சியினால் பாக்கியவானாக மாறிவிடமுடியாது. பாக்கியமாகும்படி வழிவகுத்த இயேசுவின் பாதையில் ஒருவன் செல்லும்போதுதான் அவன் பாக்கியவனாக விளங்குகிறான். அந்த பாக்கியம் பரலோக பாக்கியம். என்றென்றைக்கும் மகிழ்ச்சியைத் தருகிற ஒரு பாக்கியம்.
நீதிக்காக துன்பப்படுகிறவர்களின் சேனையில் முதலிடம்வகுத்து நமக்கு வழிகாட்டியாய் நிற்பவர் நம் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவே. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா. 1:11). மட்டுமல்ல, அவர் துன்பத்திற்கும், பாடுகளுக்கும் தன்னை மகிழ்ச்சியோடு ஒப்புக்கொடுத்தார்.
“அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” (ஏசா. 50:6). உலகத்திற்கு நீதியை விளங்கப்பண்ணும்படி வந்த இயேசு ஏன் இவ்வளவாய் பாடுபட்டார்? நமக்கு பாவமன்னிப்பைத் தந்து, இரட்சிப்பைத் தந்து பாக்கியவான்களாக மாற்றவேண்டுமென்பதற்காகவே.
இயேசுகிறிஸ்து சொன்னார்: “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்” (மத். 10:22). “உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து உங்களைக் கொலைசெய்வார்கள்” (மத். 24:9). “நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. …. அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள் (யோவா. 15:19,20).
நீங்கள் கிறிஸ்துவை பிரதிபலிக்கும்போது அவருடைய வெளிச்சம் உங்களுக்குள்ளிருந்து பிரகாசிக்கிறது. வெளிச்சத்தை இருள் ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா? புறகிறிஸ்தவர்களாயிருந்து உலகத்திற்கு ஒத்தவேஷம் தரித்து ஜீவியம் செய்கிறவர்களுக்கு, இவ்விதமாய் உபத்திரவம் வரப்போவதில்லை. அவர்கள் உலகத்தோடு ஒன்றி, உலகத்திற்காக வாழ்ந்துவிட்டு கிறிஸ்தவக் கல்லறைகளைமட்டும் சுதந்தரித்துக்கொள்ளுவார்களேதவிர, நித்தியஜீவனை அவர்கள் ஒருநாளும் சுதந்தரித்துக்கொள்ளமுடியாது. தேவபிள்ளைகளே, நீதியினிமித்தம் படுகிற ஒவ்வொரு பாடும் நித்தியத்தில் மிகுந்த ஆசீர்வாதமாக மாறும்.
நினைவிற்கு:- “மனுஷனே, …. உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்” (மீகா 6:8).