Appam, Appam - Tamil

மார்ச் 12 – வரங்களை நாடுங்கள்!

“சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார் (மத். 4:24).

இயேசுகிறிஸ்து இந்த பூமியில் இருந்த நாட்களில் அவருடைய ஊழியம் மூன்று விதங்களில் இருந்தது. முதலாவது, அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இரண்டாவது, பிசாசுகளைத் துரத்தினார். மூன்றாவது, வியாதிகளை குணமாக்கினார். ஊழியத்தின் ஒரு பகுதி வியாதியஸ்தர்களை சுகமாக்குவதாகும். எந்த ஊழியர்கள் ஆவி ஆத்துமா சரீரத்தில் தேவனுடைய சுகமளிக்கும் வல்லமையை பிரசங்கிக்கிறார்களோ, அவர்கள் அதிகமான ஆத்துமாக்களை கர்த்தருக்கென்று ஆதாயம்பண்ணுவார்கள்.

விசுவாசிகள் அனைவரும் ஆவியின் வரங்களோடும், வல்லமையோடும் செயல்படவேண்டுமென்றுதான் கர்த்தர் விரும்புகிறார். ஆகவேதான், “வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளை சுத்தம்பண்ணுங்கள், குருடரின் கண்களை திறந்துவிடுங்கள்” என்று அவர் சொல்லுகிறார். இன்று தேசம் சந்திக்கப்படவேண்டுமென்றால் அற்புதங்கள் நடந்தாகவேண்டும். கர்த்தருடைய வல்லமை வெளிப்பட்டேயாகவேண்டும்.

ஆனால் நம்முடைய விசுவாசிகளின் நிலைமை என்ன? வியாதியஸ்தர்களைப் பார்க்கும்போது, கர்த்தர் தந்த அதிகாரத்தோடும் வல்லமையோடும் ஊக்கமாய் ஜெபிக்காமல், பிரசித்திபெற்ற ஏதாவது ஒரு ஊழியரின் பெயரைச்சொல்லி கைகாட்டி விடுகிறார்கள். அல்லது அவருக்குக் கடிதம் எழுதுங்கள், இவருக்கு கடிதம் எழுதுங்கள், அவர் விசேஷ வரம் பெற்றவர் என்றெல்லாம் சொல்லி விலாசங்களைக் கொடுக்கிறார்களேதவிர பாரமெடுத்து ஜெபிப்பதில்லை.

ஊழியர்களின்மேல் எந்த ஆவியானவர் இருக்கிறாரோ, அதே ஆவியானவர் உங்கள்மேலும் இருக்கிறார். உங்களைக்கொண்டும் அவர் அற்புதங்களைச் செய்தருளுவார். அப். 8-ம் அதிகாரத்தை வாசித்துப்பாருங்கள். பிலிப்பு சாதாரண பந்திவிசாரிப்புக்காரனாய் நியமிக்கப்பட்டிருந்தார். இப்படி ஒரு சாதாரண விசுவாசியாயிருந்த அவரைக்கொண்டு கர்த்தர் பலத்த அற்புதங்களைச் செய்தார். சமாரியா பட்டணத்தையே பிலிப்பு கலக்கினார்.

அமெரிக்க தேசத்திலுள்ள டாக்டர் ஒருவரைக்குறித்து கேள்விப்பட்டேன். அவர்மூலமாய் ஆயிரமாயிரமான புற்றுநோய் வியாதியஸ்தர்கள் குணமாயினர். அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர் என்பதே அதன் காரணம். அறுவை சிகிச்சைக்கென புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எந்த வியாதியஸ்தரைக் கொண்டுவந்தாலும் முதலாவது பரிசுத்த ஆவியினாலே நிரம்பியவராய் நோயைக் கொண்டுவருகிற பிசாசைக் கடிந்துகொள்ளுவார். அதைத் தொடர்ந்து சரீரத்தில் கிரியை செய்யாதபடி வியாதிக் கிருமிகளின் வல்லமையை அழித்து ஜெபிப்பார். அதன்பிறகே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை செய்வார். பின்பு அந்த நோய் மீண்டும் அந்த சரீரத்தில் வருவதேயில்லை. எண்ணற்ற நோயாளிகள் அவர்மூலமாக குணமாக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேவபிள்ளைகளே, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்போது சோர்ந்துவிடாதிருங்கள்.  வியாதியஸ்தர் சுகமாக வேண்டுமே என்கிற பாரமும் மனதுருக்கமும் உங்களுக்குள் இருந்தால் நிச்சயமாகவே அதை உங்களுக்கு ஆவியின் வரமாகவே கர்த்தர் தந்தருளுவார். உங்கள் கரங்களின்மூலமாக பலத்த அற்புதங்களைக் கர்த்தர் செய்தருளுவார்.

நினைவிற்கு:- “பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்” (அப். 19:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.