bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

நவம்பர் 24 – சிந்தனை ஒரு யுத்தக்களம்

“அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது” (ரோம. 1:21).

அநேகர் தங்களது சிந்தனைமண்டலம் ஒரு யுத்தக்களம் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். கற்பனை உலகத்தில் வாழ்ந்து எண்ணங்களில் பாவம் செய்கிறார்கள். நினைவுகள், எண்ணங்கள், சிந்தனைகளைக் குறித்து ஜாக்கிரதையாய் இல்லாவிட்டால் ஆவிக்குரிய வாழ்க்கையிலே தோல்வியைத் தழுவவேண்டியது வரும்.

அநேகர் இரவுவேளைகளில் ஜெபிப்பதில்லை. தொலைக்காட்சி முன்பாக உட்கார்ந்துகொண்டு மாம்ச இச்சைகளைத் தூண்டிவிடுகிற ஆபாச நடனங்களை ரசித்துக்கொண்டிருப்பார்கள்.

இதனால், இரவில் காணப்படும் சொப்பனங்கள் மூலமாக ஆபாசத்தைக் கொண்டுவருகிற அசுத்த ஆவிகள் மனிதரை ஆட்கொள்கின்றன. இதன் காரணமாக அநேகர் எண்ணங்களிலே வீணராய்ப் போகிறார்கள். வேதம் சொல்லுகிறது, “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்” (நீதி. 23:7).

எண்ணங்கள் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. எண்ணங்கள் வார்த்தையாகி, வார்த்தை செயலாகி, செயல் அவனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற ஒரு கருவியாய் உருவாகிறது. ஒரு மனிதனுக்கு நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், நல்ல நினைவுகள் இருக்குமென்றால், அவன் சிறந்த மனிதனாய் விளங்குவான். எண்ணங்களை ஆவியானவருக்கு ஒப்புக்கொடுத்தால் அவர் பரலோக சிந்தனைகளைத் தருவார்.

அப். பவுல் எழுதுகிறார், “எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 10:4,5).

உங்களுடைய உள்ளத்திலே கெட்ட எண்ணங்கள் எழும்பும்போதே கர்த்தரைத் துதிக்கிற பாட்டை உள்ளத்தில் கொண்டுவந்து சாத்தானை எதிர்த்து நில்லுங்கள்.

இயேசுகிறிஸ்து கொல்கொதா மேட்டிலே தமது மாபெரும் யுத்தத்தை செய்தார். ‘கொல்கொதா’ என்றாலும், ‘கபாலஸ்தலம்’ என்றாலும் ‘மண்டையோடு’ என்பதுதான் அர்த்தம். அங்கே இருந்துதான் எண்ணங்கள், சிந்தனைகள் புறப்பட்டு வருகின்றன. இயேசுவின் தலையிலே முள்முடி சூட்டப்பட்டு தலையிலிருந்து வழிகிற இரத்தத்தினாலே சிந்தனையிலே ஜெயத்தைக் கொடுக்கச் சித்தமானார்.

உங்களுடைய வாழ்க்கையிலே ஆயிரம் தீய எண்ணங்கள் குறுக்கிடலாம். ஆனால் அந்த எண்ணங்களுக்கு நீங்கள் உள்ளத்திலே இடங்கொடுப்பீர்களானால், உங்கள் இருதயத்தில் அவை வேர்கொண்டு உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையையே தூர்த்துப்போய்விடச்செய்யும்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய எண்ணங்களிலே வரும் தீய சிந்தனைகளை அகற்றிவிட்டு, பரிசுத்தத்தை கொண்டுவந்து யுத்தக்களத்திலே நீங்கள் ஜெயமெடுப்பீர்களாக.

நினைவிற்கு:- “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோம. 12:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.