No products in the cart.
நவம்பர் 17 – ஜலத்திலிருந்து!
“அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்” (யாத். 2:10).
வேதத்திலே மோசேக்கு நீங்காத இடம் உண்டு. வேதத்தின் முதல் ஐந்து ஆகமங்களையும் மோசே தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு எழுதினார். அவருடைய மொத்த வயது நூற்றிருபது. இந்த நூற்றிருபது வருடங்களை நாற்பது வருஷங்களைக்கொண்ட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.
முதல் நாற்பது வருடம், அவர் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று அழைக்கப்பட்டு அரண்மனையிலே வாழ்ந்தார். பார்வோன் குமாரத்தி அவரை நைல் நதியண்டை குளிக்கப்போகும்போது கண்டெடுத்து புத்திரசுவிகாரம் கொடுத்து பராமரித்தாள். “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்” (அப். 7:22).
மோசே நாற்பது வயதுள்ளவரானபோது தன்னுடைய சொந்த ஜனமாகிய இஸ்ரவேலர் படும்பாட்டை கவனிக்க நேர்ந்தது. அவர் ஒரு எகிப்தியனை அடித்துக் கொன்று மண்ணிலே புதைத்த செய்தி பார்வோனுக்கு தெரிய வந்தபோது, மோசே மீதியான் தேசத்திலுள்ள வனாந்தரத்திற்கு ஓடிப்போனார். அடுத்த நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்திலே ஆடுமாடுகளை மேய்த்து தன் மாமனாரின் வீட்டிலே தங்கியிருந்தார்.
கடைசி நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு கானானை நோக்கி வழிநடத்திக் கொண்டுசென்றார். அந்த சம்பவம் மறக்க முடியாததாகும். மேலே மேக ஸ்தம்பங்களும் அக்கினி ஸ்தம்பங்களும் இஸ்ரவேலரை வழிநடத்த, கீழே மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலருக்கு முன் நடந்தார்கள். மோசேக்கு தேவனுடைய தரிசனம் கிடைத்ததும் (யாத். 33:21), கர்த்தர் மேக ஸ்தம்பத்தில் இறங்கி மோசேயோடு முகமுகமாய் பேசியதும் (யாத். 33:9) மகா மேன்மையான சம்பவங்களாகும்.
அப்படி பிரசித்திப்பெற்ற மோசேயின் குழந்தைப் பருவத்தை தியானித்துப் பாருங்கள். குழந்தையாகிய மோசேயை பாதுகாக்கவேண்டுமென்று அவரது தாய் நாணற்பெட்டியிலே வைத்து நதியிலே கொண்டுவந்து விட்டதினாலே முழு இஸ்ரவேலருக்கும் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்தது. நைல் நதியிலே வைக்கப்பட்ட அந்த சிறு நாணற்பெட்டிக்குள் குழந்தையாகிய மோசேக்குமட்டுமே இடம் இருந்தது. அந்த நாணல்பெட்டி, மோசேயினுடைய ஜீவனைப் பாதுகாத்தது. ஆம் அது பாதுகாக்கிற ஒரு பேழை.
மிகுந்த ஜலத்திலிருந்து பாதுகாத்த இன்னொரு பேழையும் உண்டு. அதுதான் நோவா கட்டின பேழை. தன்னுடைய முழு குடும்பத்திற்கும் சேர்த்து அந்த பேழையை அவர் கட்டினார். சகல மிருக ஜீவன்களுக்கும், பறவைகளுக்கும் அதைக் கட்டினார். அந்த பேழையில் நோவாவின் குடும்பத்தினராகிய எட்டுபேர் பாதுகாக்கப்பட்டார்கள்.
இன்னொரு பேழை உண்டு. அது ஜீவனுள்ள பேழை. அது தான் இயேசுகிறிஸ்துவாகிய பேழை. அந்தப் பேழைதான் இரட்சிப்பின் பேழை. கல்வாரி சிலுவை மரத்தினால் செய்யப்பட்ட பேழை. அந்தப் பேழையின் வாசல்படிகள் இயேசுவினுடைய காயங்களே. தேவபிள்ளைகளே, நீங்கள் அந்தப் பேழையிலே காணப்படுகிறீர்களா?
நினைவிற்கு :- “குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; …. அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்” (சங். 2:12).