No products in the cart.
ஜுன் 23 – கிறிஸ்துவின் பூரணம்!
“கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்” (எபே. 4:11).
கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியை நாம் அடையும்போது பூரணப் புருஷராகவே மாறிவிடுகிறோம். நமக்கு முன்மாதிரி, அளவுகோல் எல்லாமே நம் அருமை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான். அவருடைய நிறைவான வளர்ச்சி எதிலெல்லாம் இருந்தது?
லூக்கா 2:52-ம் வசனத்தில், கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சி எதிலெல்லாம் இருந்தது என்பதை நாம் அறியலாம். வேதம் சொல்கிறது: “இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்” (லூக். 2:52).
முதலாவது, அவர் ஞானத்தில் விருத்தியடைந்தார் என்று பார்க்கிறோம். கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம் என்று வேதம் சொல்கிறது. யோபு பக்தன் சொல்கிறார், “இதோ ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி” (யோபு 28:28).
சிறு காரியத்தை நீங்கள் செய்ய வேண்டுமென்றாலும் அதற்கு உங்களுக்கு ஞானம் தேவை. கர்த்தர் உங்களுக்கு வேண்டிய ஞானத்தைத் தர ஆவலுள்ளவராயிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்” (நீதி. 2:6,7). கிறிஸ்து ஞானத்திலே வளர்ந்ததுபோல நீங்களும் தேவ ஞானத்தில் வளருவீர்களாக.
இரண்டாவதாக, கிறிஸ்து வளர்த்தியிலே விருத்தியடைந்தார். ஆம், நீங்கள் ஒலிவ மரக்கன்றுகளைப்போல வளரவேண்டும் என்பது அவருடைய விருப்பம். உங்களுடைய ஒவ்வொரு ஆவிக்குரிய வளர்ச்சியிலும் அவர் மனமகிழ்ச்சியாயிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துபோய்விடக்கூடாது. நீங்கள் ஆவியின் வரங்களைப் பெறும்போதும், ஜெப ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போதும், சாட்சி பகரும்போதும், உங்களது ஆவிக்குரிய வளர்ச்சியைப் பார்த்து கர்த்தர் மிகவும் சந்தோஷப்படுகிறார்.
மூன்றாவதாக, இயேசுகிறிஸ்து கிருபையிலே வளர்த்தியடைந்தார். அதுபோல நீங்களும் கிருபையிலே பூரணப்படவேண்டுமென்று அவர் பிரியப்படுகிறார். நீங்கள் தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் தாழ்மையோடுகூட நடந்துகொள்ளும்போது, கர்த்தர் உங்களை கிருபையிலே பூரணப்படும்படி வழிநடத்துகிறார். அப். பவுலின் சாட்சி என்ன தெரியுமா? “நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று” (1 தீமோ. 1:14) என்பதே.
நான்காவதாக, கிறிஸ்து மனுஷர் தயவிலே அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மனுஷர் தயவும், அரசாங்க அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் ஆகியோரின் தயவும் தேவையில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கிறிஸ்துவை கர்ப்பம் தரித்து சுமக்க மரியாளின் தயவும், அவரோடு இணைந்து ஊழியம் செய்ய சீஷர்களின் தயவும், அவர் படகிலே நின்று பிரசங்கிக்க ஒரு படகும் அவருக்கு தேவையாகத்தானே இருந்தது.
தேவபிள்ளைகளே, நீங்கள் மனுஷர் தயவை அற்பமாய் எண்ணிவிடக்கூடாது. கர்த்தர் மனுஷருடைய கண்களிலும் தயவு கிடைக்கும்படி உதவி செய்ய வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
நினைவிற்கு:- “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், … தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” (யாக். 1:5).