No products in the cart.
ஜுன் 07 – லீலி புஷ்பம்!
“முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்” (உன். 2:2).
ஆயிரமாயிரமான மலர்களுக்குள்ளே லீலிபுஷ்பம் மகா விசேஷமானது. சாதாரண மலர்களின் வாசனையானது சிறிது தூரம்தான் எட்டக்கூடும் என்னும்போது லீலிபுஷ்பத்தின் நறுமணமோ நெடுந்தூரம் எட்டக்கூடியதாயிருக்கிறது.
பிலிப்பைன்ஸ் தேசத்தைச் சேர்ந்த ஒரு சகோதரனை நான் அறிவேன். அவர் சவுதி அரேபியாவில் நல்ல வேலை செய்துகொண்டு இரகசியமாக ஒரு ஜெபக்குழுவை நடத்திவந்தார். திடீரென்று அரசாங்கம் அதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தார்கள். பயங்கரமான சித்திரவதைகளையும், பாடுகளையும் அவர் அனுபவிக்க நேர்ந்தது.
அந்த நேரத்தில்தான் அவர் அதுவரை இல்லாத அளவுக்கு கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொண்டு தன் வாழ்க்கையிலே என்றும் ஜெபித்திராத அளவுக்கு மகா ஊக்கமாக ஜெபித்தார். அவருடைய வாசனையை அங்குள்ள கொடிய சிறை அதிகாரிகள் உணர்ந்தார்கள்.
கர்த்தருடைய பிரசன்னம் அவர் இருந்த சிறைச்சாலையை நிரம்பி வழியச்செய்தது. எப்பொழுதும் ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷை பேசி, தேவனுடைய பிரசன்னத்துக்குள்ளே இருந்த அவருடைய முகம் பிரகாசித்தது. அவருக்காகப் பரிந்துபேச பிலிப்பைன்ஸ் அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் முன்வந்தன.
அவர் விடுதலையாக்கப்பட்டபோது, முன்பு இருந்ததைப்பார்க்கிலும் ஆயிரமடங்கு தரமான கிறிஸ்தவனாகவும் ஜொலிக்கிற வைரமாகவும், பிரகாசிக்கிற பொன்னாகவும் வெளியே வந்தார்.
பகற்காலத்திலே மலருகிற ரோஜாவாகவும், இராக்காலத்திலே மலருகிற லீலிபுஷ்பமாகவும் மலர்களைக் கர்த்தர் இரண்டாகப் பிரித்ததுபோல, சீஷர்களையும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார். ஒன்று பகற்காலத்திலே அவரைப் பின்பற்றுகிற வெளியரங்கமான சீஷர்கள். மற்றொன்று இராக்காலத்திலே அவரைப் பின்பற்றுகிற அந்தரங்க சீஷர்கள்.
இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிரண்டு சீஷர்கள் பகற்காலத்திலே அவரைப் பின்பற்றி வாசனை வீசுகிற ரோஜா புஷ்பங்களாக விளங்கினார்கள். அதே நேரத்தில் இராக்காலத்திலே அவரைப் பின்பற்றுகிற அந்தரங்க சீஷர்களாக நிக்கொதேமு, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு போன்றவர்கள் லீலிபுஷ்பங்களைப்போல மணம் வீசினார்கள்.
இன்றைக்கும் கர்த்தருடைய சபையானது இரண்டு விதத்திலே இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒன்று, எல்லோரும் காணக்கூடிய வெளியரங்கமான சபை. இன்னொன்று, கம்யூனிஸ்டு தேசங்களிலே தடைச்சட்டங்களின் மத்தியிலே மறைந்து மறைந்து ஜெபித்து ஊழியம் செய்கிற சபைகள். இந்த இரண்டும் இணைந்ததுதான் தேவ சபை.
தேவபிள்ளைகளே, நீங்கள் உங்களுடைய வெளியரங்கமான ஜீவியத்திலும், அந்தரங்க ஜீவியத்திலும் கர்த்தருக்கு நற்கந்தமாக விளங்க வேண்டும்.
நினைவிற்கு:- “பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. அத்திமரம் காய்காய்த்தது; திராட்சச்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா” (உன். 2:12,13).