No products in the cart.
ஜனவரி 14 – நீங்கள் கொடிகள்!
“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” (யோவா. 15:5).
கர்த்தருக்கும் நமக்கும் இருக்கிற உறவுமுறை எத்தனை ஆச்சரியமானது! எத்தனை மகிழ்ச்சியானது! கிறிஸ்துவே நம்முடைய திராட்சச்செடியாய் இருக்கிறார். நானே மெய்யான திராட்சச்செடி என்று சொல்லுகிறார். நாம் அவரிலே இணைந்திருக்கிற கொடிகள். அவருடைய உச்சிதங்களையெல்லாம் அனுபவிக்கும்படி அவரோடு இணைந்திருக்கிற கொடிகள்.
திராட்சச்செடியினுடைய குணாதிசயங்களும், சுபாவங்களும், தானாகவே கொடிக்குள் வந்துவிடுகின்றன. நாம் திராட்சச்செடியிலுள்ள கொடிகளாய், கிறிஸ்துவைச் சார்ந்துகொண்டிருப்போமானால் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை.
ஏனென்றால் திராட்சைக்கொடிக்கு வேண்டிய சத்துவத்தைக் கொடுப்பது திராட்சைச்செடி அல்லவா? நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கிறவர் தேவன் அல்லவா? தண்ணீர் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதுவரையிலும் செடி தனது வேர்களை அனுப்பி தண்ணீரை உறிஞ்சி கொடிக்குக் கொடுக்கிறது.
நம்முடைய ஆண்டவர் எல்லாவற்றுக்கும் மேலானவர், வானமும் பூமியும் அவருடையது. பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது. வெள்ளியும் பொன்னும் அவருடையது. சகல காட்டுமிருகங்களும், பறவைகளும் அவருடையது. அவர்தான் நம்மை அன்போடு பார்த்து நான் செடி, நீங்கள் கொடிகள் என்கிறார். அப்படியிருக்க, நம்முடைய பாரங்களையெல்லாம் கர்த்தர்மேல் வைத்து அவருடைய மார்பிலே சாய்ந்து அவரிலே களிகூர்ந்து கொண்டிருப்போமாக.
வேதம் சொல்லுகிறது, “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது. 5:7).
அநேகர் வீணாக கவலைப்படுகிறார்கள். ‘கர்த்தர் திராட்சச்செடிதான். நான் கொடியாய் இருந்தாலும் எனக்கென்று சில பொறுப்புகள் இருக்கிறது அல்லவா? அந்த உத்தரவாதத்தை நான் நிறைவேற்றவேண்டும் அல்லவா’ என்று வீணாக கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஊழியக்காரர் அடிக்கடி வேடிக்கையாக ஒன்றை சொல்லுவதுண்டு. ‘சிலருடைய பெரிய கவலை என்ன தெரியுமா? நான் எப்படி கவலைப்படாமல் இருக்கமுடியும் என்று சொல்லி அதற்காகவே கவலைப்படுகிறார்கள். ஒரு கவலையும் இல்லையே என்பதுதான் அநேகருடைய கவலையாக இருக்கிறது’ என்பார் அவர். நாம் கவலைப்படும்போது நம்மேல் அக்கறையுள்ள தேவன் ஒருவர் உண்டு என்பதை நம்மை அறியாமலேயே மறுதலித்துவிடுகிறோம்.
கர்த்தர் திராட்சச்செடியாய் இருப்பாரானால் கொடி கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. கிராம மக்கள் ஒரு பழமொழியைச் சொல்லுவதுண்டு. ‘கவலைப்படாதீர்கள் ஐயா, தலைக்குமேல் போகும் வெள்ளம் ஜாண் போனால் என்ன, முழம் போனால் என்ன? மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்’ என்பார்கள். கிராம மக்கள்கூட இறைவனைச் சார்ந்துகொள்ளுவது எப்படி என்று அறிந்திருக்கிறார்கள்.
தேவபிள்ளைகளே, கர்த்தரில் எப்போதும் சார்ந்துகொள்ளுங்கள். கொடியாகிய உங்களுக்கு தேவையானது என்ன என்பது திராட்சச்செடியாகிய கர்த்தருக்கு தெளிவாகத் தெரியும்.
நினைவிற்கு:- “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” (மத். 6:33).