Appam, Appam - Tamil

ஜனவரி 01 – பலுகிப் பெருகுங்கள்!

“பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் (ஆதி. 9:1) என்றார்.

என் அன்பு வாசகர்களாகிய உங்கள் யாவருக்கும் என் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களை உளமார கூறிக்கொள்ளுகிறேன். கர்த்தருடைய ஊழியக்காரனாய் நின்று உங்களையும், உங்களுடைய அருமைக் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கிறேன்.

நோவாவின் வாழ்க்கையிலே ஒரு புதிய ஆரம்பம் உண்டானது. பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது. பாவிகளும், துன்மார்க்கரும் ஜலப்பிரளயத்தினால் அழிந்துபோனார்கள். நோவாவின் குடும்பத்தார் ஒரு உன்னத அனுபவத்துடன் ‘அரராத்’ என்னும் மலையில் வந்து இறங்கினார்கள்.

கர்த்தரோடு நீங்களும் ஒரு புதுவருட ஆரம்பத்தில் வந்திருக்கிறீர்கள். நோவாவையும் அவருடைய குமாரரையும் ஆசீர்வதித்த ஆண்டவர், இன்றைக்கு உங்களையும் ஆசீர்வதிக்கிறார். பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று நோவாவின் குடும்பத்தாரிடம் சொன்னவர், இன்றைக்கு சுவிசேஷத்தால் உலகத்தை நிரப்பும்படி உங்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார். உங்களுக்கு ஆவிக்குரிய சந்ததியை நிச்சயமாகவே அவர் தந்தருளுவார்.

லாமேக்கின் மகனாகவும், மெத்தூசலாவின் பேரனாகவும், ஏனோக்கின் கொள்ளுப்பேரனாகவும், ஆதாமின் சந்ததியிலே பத்தாவது தலைமுறையாக வந்தவர் நோவாவாகும். அவருடைய மேன்மையெல்லாம் தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்ததிலே இருந்தது. நோவா தேவனோடு நடந்தார், உலாவினார், சஞ்சரித்தார், முகமுகமாகப் பேசினார். தேவபிள்ளைகளே, தேவன்தாமே தனக்கும் உங்களுக்குமிடையே ஒரு ஆழமான உறவையும் ஐக்கியத்தையும் தந்தருளுவாராக.

சந்திர மண்டலத்திற்குச் சென்றுவந்த விண்வெளி வீரரான எர்வின் என்பவர், “நான் சந்திரனிலே நடந்தேன் என்பது பெரிய காரியமல்ல. சந்திரனையும், சூரியனையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கின தேவன் என்னோடுகூட, உலக வாழ்க்கையிலே நடந்துவருகிறார் என்பதை எண்ணும்போது என்னுடைய உள்ளம் பரவசமடைகிறது” என்று சொன்னார். கர்த்தர் உங்களோடுகூட நடக்கும்போது, உங்களுக்கு கவலையோ, பயமோ ஏற்படுவதில்லை.

“கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்பதாலேயே தன் மகனுக்கு நோவா என்று லாமேக்கு பெயர் வைத்தான் (ஆதி. 5:29). நோவா என்றால் தேற்றுகிறவன் என்று அர்த்தம். லாமேக்குக்கு தேற்றுகிற ஒரு நோவா இருந்ததுபோல, நமக்கு பரிசுத்த ஆவியானவர் தேற்றுகிறவராக இருக்கிறார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை …” என்று இயேசு சொன்னார் (யோவா. 14:16).

அவர் எப்படி நம்மைத் தேற்றுவார் தெரியுமா? ஒரு தாய் தேற்றுவதுபோல அவர் நம்மைத் தேற்றுவார். கர்த்தர் சொல்லுகிறார், “ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்” (ஏசா. 66:13). தேவபிள்ளைகளே, இந்த ஆண்டு உங்களுக்கு மிகுந்த ஆறுதலும், தேறுதலும் உண்டாகக்கூடிய ஒரு ஆசீர்வாதமான ஆண்டாயிருப்பதாக.

நினைவிற்கு:- “கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்” (சங். 115:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.