Appam, Appam - Tamil

ஜனவரி 01 – இழந்தபோன வருஷங்கள்

“தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்” (சங். 90:15).

கர்த்தருடைய பெரிதான கிருபையினாலே, புதிய ஆண்டுக்குள் நாம் பிரவேசித்திருக்கிறோம். இதுவரை கிருபைபாராட்டி வழிநடத்தி வந்தவர், இனிமேலும் உங்களை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்திச்செல்லுவார். உங்களுக்கு என் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாவதாக.

கடந்த ஆண்டில் எத்தனையோ சிறுமைப்பட்ட நாட்களையும், வேதனையை அனுபவித்த நாட்களையும் சந்தித்தோம். ஆனால் இப்புதிய ஆண்டில் அவைகள் உங்களை பின்தொடரக்கூடாது. கடந்த ஆண்டில் நீங்கள் கண்ணீரோடு நடந்த அனுபவங்களுக்குத்தக்கதாக புதிய ஆண்டில் இரட்டிப்பான ஆசீர்வாதத்தால் கர்த்தர் உங்களை மகிழ்ச்சியாக்குவார்.

கடந்த காலங்களில் ஏன் உங்களுக்கு அதிகமான உபத்திரவங்களும், பாடுகளும், சிறுமைகளும் வந்தன? வேதம் சொல்லுகிறது, “உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு உன்னைச் சிறுமைப்படுத்தி உன்னைச் சோதித்து ….” (உபா. 8:15). ஆம்! கர்த்தர் உங்களைக்குறித்து ஒரு திட்டம் வைத்திருக்கிறார். உங்களை இந்த புதிய ஆண்டுக்குள் கொண்டுவந்து உங்களுக்கு நன்மை செய்வதே கர்த்தருடைய திட்டம். கர்த்தர் சொல்லுகிறார், “நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்” (ஏசா. 65:22).

தாவீது கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்தான். சாமுவேலால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்தான். ஆனால், அவருக்குப் பல நெருக்கங்களும், பாடுகளும் இருந்தன. சவுல் அனுதினமும் தாவீதை வேட்டையாடும்படி மலைகளிலும், குகைகளிலும் துரத்திக்கொண்டு சென்றார். கர்த்தர் ஏன் இந்தப் பாடுகளை தாவீதுக்கு அனுமதித்தார்? பிற்காலத்திலே தாவீதைச் சிறந்த ஒரு இராஜாவாக மாற்றும்படியாகவும், கர்த்தருடைய வல்லமையான தீர்க்கதரிசியாக உயர்த்தும்படியாகவும்தான் இந்த பாடுகளை அனுமதித்தார்.

ஒருநாள் தாவீதின் துயரத்திற்கு முடிவு வந்தது. சிறுமைப்பட்ட நாட்களுக்கும் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தாவீது இராஜா முழு இஸ்ரவேலின்மேலும் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். எத்தனை மகிழ்ச்சி! தாவீதினுடைய முடிவைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா? “அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய் நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின் ….” (1 நாளா. 29:28).

நீங்கள் கடந்து சென்ற ஒவ்வொரு உபத்திரவமும் உங்களை ஆசீர்வாதத்துக்குள் கொண்டுவருகிறது. உபத்திரவங்கள் ஒருபோதும் நீண்ட காலம் நீடிக்கமுடியாது (1 பேது. 1:6; 5:10). ஆனால் அந்த உபத்திரவத்திற்கு அப்பால் ஒரு பெரிய மகிழ்ச்சி, சந்தோஷம், ஆசீர்வாதம் இருக்கிறது என்பதை மறந்துபோகாதீர்கள்.

தேவபிள்ளைகளே, ஒருவேளை நீங்கள் இரட்சிக்கப்படாத கணவன் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டிருந்திருக்கலாம். அவருடைய கொடுமையான சீறலின்மூலமாக நீங்கள் மனமுடைந்து போயிருந்திருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு கர்த்தர் அதை எல்லாம் மாற்றி, இழந்துபோன எல்லாவற்றையும் இரட்டிப்பாய் தந்து உங்களை மகிழ்ச்சியடையச் செய்வார். நீங்கள் சிறுமைப்பட்ட நாட்களும் துன்பத்தைக் கண்ட வருஷங்களும் முடிந்துபோயின.

நினைவிற்கு:- “எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்” (சங். 90:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.