No products in the cart.
செப்டம்பர் 18 – பாத்திரவான்களாவதற்கு அழைப்பு!
“அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,” (எபே. 4:1).
ஒவ்வொரு தேவ பிள்ளையும் முதலாவது, தேவன் அழைத்த பரம அழைப்புக்குப் பாத்திரவானாய் நடந்துகொள்வது அவசியம். கர்த்தர் உங்களை உன்னத அழைப்பினால் அழைத்திருக்கிறார். நித்தியத்தையும், சிங்காசனத்தையும், பரலோகத்தின் மேன்மைகளையும் சுதந்தரித்துக்கொள்வதற்காக அழைத்திருக்கிறார். இந்த அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொண்டு, கர்த்தர் இவ்வளவு அன்புவைத்து என்னை அழைத்திருக்கிறாரே என்ற நன்றியறிதலுடன் அதற்குத் தகுதியுள்ள வாழ்க்கை வாழுங்கள்.
கர்த்தர் சொல்லுகிறார், “ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” (வெளி. 19:9). “கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்” (மத். 22:8). தேவபிள்ளைகளே, நீங்கள் இந்த அழைப்புக்குப் பாத்திரவான்களாக காணப்படுகிறீர்களா?
இரண்டாவது, “நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்” (பிலி. 1:27). சுவிசேஷத்தை தேவதூதரை நம்பிக் கொடுக்காமல், சாதாரண மனுஷராகிய உங்களை நம்பி, உங்களுடைய கரங்களிலே கர்த்தர் கொடுத்திருக்கிறார். ஆகவே நீங்கள் போய் சர்வ சிருஷ்டிக்கும், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். இந்த சுவிசேஷம், கல்வாரிச் சிலுவையிலே இரத்தக்கிரயம் செலுத்திப் பெறப்பட்ட சுவிசேஷமாகும். அது பாவ அடிமைத்தனத்தை முறித்து இரட்சிப்பின் சந்தோஷத்தையும், சாபக்கட்டுகளை முறித்து ஆசீர்வாதத்தையும் கொண்டுவருகிறது.
அப். பவுல் சொல்லுகிறார், “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ, அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோம. 1:16). இந்த சுவிசேஷத்தை, தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷம் என்று வேதம் அழைக்கிறது (2 கொரி. 4:4). “சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்” (ரோம. 10:15) என்று வேத்தில் வாசிக்கிறோம்.
மூன்றாவது, பரலோக ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரவான்களாய் காணப்படவேண்டும். உதாரணமாக, இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் தேசத்திற்குச் செல்லுகிறவர்கள், அந்த தேசத்திலுள்ள சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிகிறவர்களாக காணப்படவேண்டும். இல்லாவிட்டால் அந்த அரசாங்கம் அவர்களை குற்றவாளியென்று தீர்த்துவிடும். நாடுகடத்திவிடும். அப்படியானால், பரலோக ராஜ்யத்தின் மேன்மைக்காக அழைக்கப்பட்டிருக்கிற நாம், எவ்வளவு அதிகமான பாத்திரவான்களாக நடந்துகொள்ளவேண்டும்!
வேதம் சொல்லுகிறது, “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத். 5:3). தாழ்மையுடனும், எளிமையாயும் வாழ்வீர்களென்றால், கர்த்தர் உங்களுக்கு கிருபையளிப்பார். அந்த கிருபையால் பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வீர்கள். தேவபிள்ளைகளே, “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” (மத். 25:34) என்று கர்த்தர் உங்களை அன்போடு அழைக்கிறார்.
நினைவிற்கு:- “பரிசுத்தவான்கள் ராஜரீகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” (தானி. 7:18).