No products in the cart.
செப்டம்பர் 05 – தேவதூதர்கள் போராடுகிறார்கள்!
“கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” (சங். 34:7).
தேவதூதர்கள் நல்ல யுத்த வீரர்களாகவும், நமக்காகப் போராடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். நாம் நம் அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு பெரிய குடும்பத்திற்குள் சேருகிறோம். அந்த குடும்பம் பரலோகக் குடும்பம் ஆகும். நீங்களோ ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களிடத்தில் வந்து சேர்ந்தீர்கள் என்று வேதம் சொல்லுகிறது (எபி. 12:22-24).
கர்த்தருடைய குடும்பத்தில் இருக்கும் இந்த தேவதூதர்கள் எப்போதும் நமக்கு ஆதரவாகவே நிற்கிறார்கள். கர்த்தர் அவர்களை நமக்கு பணிவிடை ஆவிகளாகத் தந்திருக்கிறார் (எபி. 1:14). ஆகவே அந்த தேவதூதர்களெல்லாம் நம்மை சூழப் பாளயம் இறங்கி விடுவிக்கிறார்கள். நம்முடைய பாதங்கள் கல்லிலே இடறாதபடிக்கு தங்கள் கரங்களில் ஏந்திக்கொண்டு போகிறார்கள் (சங். 91:11,12). மாத்திரமல்ல, போராட்ட நேரங்களிலும், யுத்த நேரங்களிலும் நமக்காக இறங்கி வந்து யுத்தம்செய்கிறார்கள்.
அன்று இஸ்ரவேலின் இராஜாவாகிய எசேக்கியாவின்மேல் அசீரியாவின் இராஜாவாகிய சனகெரிப் படையெடுத்து வந்தான். அசீரியாவின் படைத்தளபதிகள் இஸ்ரவேலரையும் கர்த்தரையும் தூஷித்தார்கள். அவர்களை எதிர்த்து நிற்க எசேக்கியாவிடம் படைபலமுமில்லை, உள்ளத்தில் உறுதியுமில்லை. அது மட்டுமல்ல, அசீரியா இராஜா தன் ஸ்தானாதிபதிகள் மூலம் பயமுறுத்தல்கள் நிரூபத்தை எசேக்கியா இராஜாவுக்கு கொடுத்தனுப்பினான். ஒருபக்கம் பயங்கரமான போராட்டமும் யுத்தமும் நெருங்க, மறுபக்கம் நிந்தைகளும் அவமானங்களும் சூழ்ந்துகொண்டன.
இந்தப் போராட்ட நேரத்தில் எசேக்கியா இராஜா செய்தது என்ன தெரியுமா? வேதம் சொல்லுகிறது: “நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, …. இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான்” (2 இரா. 19:14,19).
அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால் கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள் (2 இரா. 19:35).
எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்ட தேவன் இன்றும் என்றும் ஜீவிக்கிறவர், மாறாதவர். அவர் உங்கள் ஜெபத்தையும் கேட்பார். நீங்கள் போராட்டத்தின் பாதையிலே கடந்துசெல்லுகிறீர்களா? உங்களுடைய உள்ளத்தைக் கர்த்தருக்கு முன்பாகத் திறந்துவையுங்கள். அன்று எசேக்கியாவுக்குத் துணையாக தேவதூதர்களை அனுப்பியவர், உங்களுக்காக யுத்தம்செய்ய தூதர்களை அனுப்புவார்.
நமக்கு பணிவிடை செய்யவேண்டுமென்பதற்காக, பலமிக்க தேவதூதர்களை வேகமாயும், தீவிரமாயும் அனுப்புகிறார் என்பதற்கு வேதம் எண்ணற்ற சாட்சிகளை நம் கண்முன்பாக நிறுத்துகிறது. ஆம், அந்த தூதர்களெல்லாம் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்முடைய அன்பின் தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
வேதம் சொல்லுகிறது, “வானத்திலே யுத்தமுண்டாயிற்று. மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை” (வெளி. 12:7). தேவபிள்ளைகளே, சாத்தான் ஒருபோதும் ஜெயங்கொள்ளவேமுடியாது.
நினைவிற்கு:- “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்” (தானி. 12:1).