Appam, Appam - Tamil

செப்டம்பர் 01 – பரிசுத்தரின் அழைப்பு

“உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேது. 1:15).

அப்போஸ்தலனாகிய பேதுரு, “உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும்” என்று குறிப்பிடுவதைக் கவனியுங்கள். உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாய் இருக்கவேண்டுமென்று அப். பவுலும் குறிப்பிடுகிறார் (1 தீமோ. 4:12). கர்த்தருடைய கண்கள் தராசுபோல இயங்கி உங்களுடைய ஒவ்வொரு நடக்கையையும் சீர்தூக்கிப்பார்க்கிறது.

உங்களுடைய நடக்கையை கர்த்தர் தன்னோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார். அவர் பரிசுத்தராய் இருக்கிறதுபோல நீங்களும் உங்களுடைய நடக்கையிலே பரிசுத்தராய் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறார். ஒருவேளை உங்களுடைய நடக்கைகளை, உலகத்தார் ஒருசிலரோடு ஒப்பிட்டு, நான் நீதிமான், நான் அவர்களைவிட எவ்வளவோ பரவாயில்லை என்று நீங்களே உங்களைத் தேற்றிக்கொள்ளலாம்.

ஆனால் கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையை உலகத்தாரோடு ஒப்பிடுகிறவர் அல்ல. தம்மோடு ஒப்பிடுகிறவர். நீங்கள் அவருடைய சாயலில் அல்லவா சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள்? வேதம் சொல்லுகிறது, “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (1 பேது. 2 :12).

நடக்கை என்றால் என்ன? உங்களுடைய வார்த்தைகள், செயல்கள், எண்ணங்கள் மற்றும் அனுதின வாழ்க்கையிலே நீங்கள் ஜீவிக்கிற விதம் ஆகியவற்றைத்தான் ‘நடக்கை’ என்னும் வார்த்தை குறிப்பிடுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளுடைய நடக்கை எப்படி இருக்க வேண்டும்? சங்கீதக்காரர் சொல்லுகிறார், “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங். 1:1,2).

மட்டுமல்ல, உங்களுடைய நடக்கையிலே தெய்வீக அன்பும் இணைந்திருக்கட்டும். உங்கள் அன்பு கள்ளம் கபடமற்றதாக, தியாகமானதாக, சுயநலமற்றதாக விளங்கும்போது, அந்த அன்பினிமித்தம் அநேகர் கிறிஸ்துவண்டை இழுக்கப்படுவார்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படும். இயேசு சொன்னார், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்” (யோவா. 13:35).

புதிய ஏற்பாட்டில், நாம் நடக்க வேண்டிய நடக்கையைக் குறித்து இரண்டு முக்கியமான கட்டளைகளை இயேசு கொடுத்தார். முதலாவது, நம்முடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் கர்த்தரில் அன்புகூரவேண்டும். முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்புகூர வேண்டும். இரண்டாவது, நாம் நம்மில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும். தேவபிள்ளைகளே, அப்படி நீங்கள் வாழ்வீர்களானால், அந்த அன்பின் நடக்கையில் கர்த்தர் மனம் மகிழுவார். உலகத்துக்கும் நீங்கள் சாட்சியுள்ளவர்களாய் விளங்குவீர்கள்.

நினைவிற்கு:- “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது” (யோவா. 15:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.