Appam, Appam - Tamil

அக்டோபர் 19 – ஞானத்தின் ஆரம்பம்!

“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதி. 1:7).

சாலொமோன் ராஜா எழுதிய பழமொழிகளின் தொகுப்பே நீதிமொழிகள் புத்தகமாகும். சாலொமோன் ராஜா மூவாயிரம் நீதிமொழிகளையும், ஆயிரத்து ஐந்து பாடல்களையும் இயற்றினார். அவர் இயற்றிய இந்த பழமொழிகள் அவருடைய நாட்களிலும், நம்முடைய நாட்களிலும் நீதியின் களஞ்சியங்களாய் விளங்குகின்றன.

நீதிமொழிகள் புத்தகத்தில் மொத்தம் 31 அதிகாரங்கள் உண்டு. ஒரு போதகர் தன்னுடைய சபை மக்களிடம், “நீங்கள் காலையில் பழைய ஏற்பாட்டையும், மாலையில் புதிய ஏற்பாட்டையும் வாசித்துவந்தாலும், ஒவ்வொருநாளும் நீதிமொழிகளிலுள்ள ஒரு அதிகாரத்தை கட்டாயம் வாசிக்கவேண்டும்” என்று வலியுறுத்தி வந்தார். அதிலுள்ள 31 அதிகாரங்களும் மாதத்தின் 31 நாட்களுக்கு சரியான எண்ணிக்கையில் அமைந்துள்ளன. சில மாதங்களில் 31 நாட்களுக்குக் குறைவாயிருக்கும்போது கடைசி நாளில் மீதியுள்ள பாகத்தையும் வாசித்து முடிக்கவேண்டுமென்று வலியுறுத்தினார்.

இன்னொரு போதகர் பிரசங்கிக்கும்போது, “நான் உங்களுக்கு திருடவும், குடிக்கவும், சத்தியம் செய்யவும் கற்றுக்கொடுக்கப்போகிறேன்” என்றார். ஜனங்கள் அதைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். அவர் சிரித்த முகத்தோடு சொன்னார், “அனுதினமும் நீதிமொழிகளின் புத்தகத்தைப் படிக்க உங்கள் நேரத்தை திருடி, அதிலுள்ளதை தியானித்து, ஆழமான சத்தியத்தைப் பருகிக் குடித்து, பின்பு உங்கள் படுக்கையில் அதை தியானித்து, இந்த சத்தியங்களையெல்லாம் என் வாழ்க்கையில் கடைப்பிடிப்பேன் என்று தீர்மானியுங்கள்” என்றார்.

ஆம், எந்த ஒரு மனிதன் நீதிமொழிகள் புத்தகத்தை வாசிக்கின்றானோ, அவன் “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்ற சத்தியத்தை அறிந்துகொள்ளுகிறான். கர்த்தருக்குப் பயப்படுதலோடுகூட, இந்த ஞான வசனங்களை வாழ்க்கையில் செயல்படுத்தும்போது எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதையும் அறிந்துகொள்ளுவான். அவனுடைய வாழ்க்கையும் உண்மையான சாட்சியின் ஜீவியமாய் மாறி, கர்த்தருக்குப் பிரியமானதாய் அமையும்.

நீதிமொழிகள் புத்தகத்தை வாசிப்பதினால் ஏற்படும் ஆசீர்வாதங்கள் எவை? வேதம் சொல்லுகிறது, “அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு, தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்” (நீதி. 2:12-15).

ஞானம் மற்றும் மதியீனம் பற்றி நீதிமொழிகள் 1-ம் அதிகாரம் முதல் 9- ம் அதிகாரம் வரையிலும் விளக்கப்பட்டிருக்கிறது. ‘ஞானம் தன் வீட்டைக் கட்டி’ என்று, ஞானத்தை வீட்டைக் கட்டுகிற ஒரு பெண்ணுக்கு உவமானமாகக் கூறியிருக்கிறது. அதுபோலவே, மதியீனத்தையும் நீதிமொழிகள் ஒரு பெண்ணுக்கு உவமானப்படுத்தியிருக்கிறதைக் காணலாம். இயேசு சொன்னார், “ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்” (மத். 11:19).

தேவபிள்ளைகளே, மலைப் பிரசங்கத்தில் காணப்படும் அவருடைய ஞானமும், உபதேசங்களில் உள்ள அவருடைய ஞானமும், குற்றம் கண்டுபிடிக்கிறவர்களிடத்தில் காணப்படும் அவருடைய ஞானமும், சிலுவையில் அறையப்படும்போதுகூட உரைக்கப்பட்ட அவருடைய வார்த்தையிலுள்ள ஞானமும் நம்மை ஆச்சரியப்படவைக்கிறதல்லவா?

நினைவிற்கு:- “உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்” (லூக். 21:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.