Appam, Appam - Tamil

அக்டோபர் 16 – சம்பூரணமான நன்மை!

“எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” (சங். 4:6).

எங்களுக்கு நன்மை காண்பிப்பவர் யார் என்று உலகத்தார் புலம்புகிறார்கள். எங்களை விடுதலை செய்கிறவர் யார் என்றும், எங்களுக்கு வழி காட்டுபவர்கள் யார் என்றும், எங்களுக்கு உதவி செய்கிறவர் யார் என்றும், எங்கே எங்களுக்கு பாதை திறக்கும் என்றும் அநேகர் தடுமாறுகிறார்கள்.

ஆனால் நாமோ, நம்முடைய ஆண்டவரை அன்போடு நோக்கிப்பார்க்கிறோம். அவர் நமக்கு சகலவிதமான நன்மைகளையும் சம்பூரணமாய்க் கொடுக்கிற தேவன். அவர் முற்றிலும் நம்முடையவராயிருக்கிறார். நாம் அவருடையவர்களாயிருக்கிறோம். அவர் நம்முடைய மேய்ப்பனாயிருக்கிறார். நாம் அவருடைய மந்தையின் ஆடுகளாய் இருக்கிறதினாலே நாம் ஒருநாளும் குறைவுபட்டுப்போவதேயில்லை. ஒரு நாளும் தாழ்ச்சியடைவதில்லை. எரேமியா தீர்க்கதரிசி சொல்லுகிறார், “கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்தியராஜா” (எரே. 10:10).

உண்மையாகவே கர்த்தரைத் தஞ்சமாய்க்கொண்டிருக்கிற ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள். அவருடைய அன்பை ருசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவருடைய வழியிலே உத்தமமாய் நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவருடைய முகத்தின் ஒளியினால் பிரகாசம் அடைகிறவர்கள் பாக்கியவான்கள். வேதம் சொல்லுகிறது, “ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள்” (உபா. 33:19).

தம் பிள்ளைகளை திருப்தியாய் போஷித்து வழிநடத்துகிற ஆண்டவர், இந்த பூமியிலுள்ள ஆசீர்வாதங்களோடுகூட கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் கொடுக்கிறவராம். மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அனுபவிக்கும்படி அநுக்கிரகம் செய்கிறவராம். உலகத்தாருக்கு அதை மறைத்து வைத்திருக்கிறார். ஆனால் தம்முடைய பிள்ளைகளுக்கோ வாரி வழங்குகிறார்.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பலவிதமான விஞ்ஞான படைப்புகளைக் குறித்து சிந்தித்துப்பாருங்கள். அவைகளைக் கண்டுபிடித்தவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ விஞ்ஞானிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் தேவபக்தியுள்ளவர்கள். ஜெபித்து ஆண்டவரிடத்திலே கேட்டபோது மறைபொருட்களை ஆண்டவர் அவர்களுக்கு வெளிப்படுத்திக்கொடுத்தார். கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கும்போது, அவரிடத்திலே மனம்திறந்து கேட்கும்போது அவர் அறிவாகிய பொக்கிஷத்திலிருந்தும், ஞான பொக்கிஷத்திலிருந்தும் அளவில்லாமல் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்.

பாருங்கள்! உலகத்திலே எத்தனையோ தேசங்கள் இருந்தபோதிலும் கிறிஸ்தவ தேசமான அமெரிக்காவின் விஞ்ஞானிகள்தான் சந்திரமண்டலத்திற்கு ராக்கெட்டிலே சென்று அங்கே கால் பதித்தார்கள். அந்த விண்வெளி வீரர்கள் வேதாகமத்தை தங்களோடுகூட எடுத்துச் செல்ல மறக்கவில்லை. ஆகவேதான் சம்பூரணமான அறிவை கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்தார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களாயிருக்கிறீர்களா? அறிவிலும் விவேகத்திலும் குறைவுள்ளவர்களாய் காணப்படுகிறீர்களா? இன்றைக்கு கர்த்தரை நோக்கிப்பாருங்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.