Appam, Appam - Tamil

Sep 23 – ஆடுகளை அனுப்புகிறேன்!

“ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்” (மத். 10:16).

ஒரு நாத்திக மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கடவுள் இல்லை என்ற தங்களுடைய கூற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு பக்தன் நேராக மேடைக்குச் சென்றார். “உங்களுடைய புத்திக்கூர்மையினால் பல வாதங்களைச் செய்கிறீர்கள். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டும். இன்று உலக முழுவதுமே உணவாகக்கொண்டிருந்தும் ஆடுகளின் இனம் முற்றிலும் அழிக்கப்படாமலும், குறைந்துபோகாமலும் இருப்பதற்கு என்ன காரணம்?

அவர் எழுப்பிய கேள்விக்கு அவரே கீழ்க்கண்டவாறு பதிலளிக்க முற்பட்டார். “ஆடுகள் சாதுவானதும், எதிர்ப்பதற்கு சக்தியற்றதுமான ஒரு மிருகம். அது பாம்பைப்போல விஷம் உள்ளது அல்ல. நாயைப் போன்று கடிக்கக்கூடியதும் அல்ல. கழுதையைப் போன்று எட்டி உதைக்கக்கூடியதும் அல்ல. காண்டாமிருகத்தைப் போல முட்டக்கூடிய கொம்பும் அதற்கு இல்லை. தேளைப்போல கொடுக்கோ, யானையைப்போல துதிக்கையோ அதற்கு இல்லை. அது மிகவும் சாதுவானது. ஆனால் அதற்கு இருக்கும் விரோதிகளோ மிக அதிகம்.

ஆடுகளுக்கு மனிதன் பாதுகாப்பு கொடுக்கிறான் என்று ஒருவேளை நீங்கள் வாதிடலாம். ஆடுகளின் உபயோகத்தை மனிதன் பெறுவதற்கு முன்பே இவைகள் முற்றிலும் அழிக்கப்படாமல் இருந்ததின் இரகசியம் என்ன? அதற்குக் காரணம் அவைகளை சிருஷ்டித்த கர்த்தர் உயிரோடு இருக்கிறார் என்பதேயாகும்” என்று அவர் சொன்னார்.

அன்று கர்த்தர் சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது, “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, அனுப்புகிறேன்” என்று சொல்லித்தான் அனுப்பினார். கர்த்தர் மேய்ப்பனாய் இருக்கிறபடியால் அவர்கள் தாழ்ச்சியடையவில்லை.

இயேசுகிறிஸ்து அவர்களைப் பார்த்து, “நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்” (லூக். 22:35).

ஆதித் திருச்சபையாகிய மந்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குத்தான் எத்தனை விரோதிகள்! அவர்களைக் கொலை செய்கிறவர்கள் அதன் மூலம் தேவனுக்குத் தொண்டு செய்வதாக எண்ணினார்கள். யூதர்கள் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் மூர்க்க வெறிகொண்டு எழும்பினார்கள். இராஜாவாகிய ஏரோது சீஷர்களை அழிப்பதில் வைராக்கியமாக இருந்தார்.

மட்டுமல்ல, சபையானது நீரோ மன்னன் காலத்தில் மிக பயங்கரமான உபத்திரவத்திற்குள் கடந்து சென்றது. கிறிஸ்தவர்களை வேரோடு அழிக்கத் தீர்மானமாய் இருந்தும், இராஜாவால் அவர்களை அழிக்க முடியவில்லை. அந்தச் சிறிய மந்தைக்கு இருந்த பெரிய மேய்ப்பர்தான் அதன் காரணம். கர்த்தரே அவர்களைத் தேற்றினார், பாதுகாத்தார், பெருகப்பண்ணினார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் மேய்ப்பராய் இருக்கிறபடியால் நீங்கள் ஒருபோதும் குறைவுபட்டுப்போவதில்லை.

நினைவிற்கு:- “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசா. 41:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.