Appam, Appam - Tamil

Sep 22 – சிதறிப்போன ஆடுகள்!

“ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய்ச், சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?” (மத். 18:12).

ஆடு என்பது எந்தவிதத்திலும் பாதுகாப்பு இல்லாத ஒரு பிராணி ஆகும். அதற்குத்தான் எத்தனை பயங்கரமான கொடூரமான விரோதிகள்! இருப்பினும், சிங்கம், கரடி, புலி, ஓநாய் போன்ற கொடிய மிருகங்களெல்லாம் பெருகுவதைப் பார்க்கிலும் ஆடுகள் பத்து மடங்கு அதிகமாய்ப் பெருகுகின்றன.

ஆட்டின் மந்த சுபாவத்தினால், புல்வெளியைத் தேடி மேய்ப்பனைவிட்டு தூரமாய் சென்றுவிடுகின்றன. சில ஆடுகள் காணாமலும் போகின்றன. சில சிதறுண்டு போகின்றன. இன்றைக்கும் மனிதன் பாதாளத்தையும், அக்கினியையும் குறித்து சிந்திக்காமல், கண்ணின் காட்சியிலே நடந்து உலக சிற்றின்பங்கள் பின்னால் ஓடுகிறான். போதை வஸ்துகளுக்கும், மதுபானங்களுக்கும் அடிமையாகி பலவித இச்சைகளினால் பீடிக்கப்படுகிறான்.

வேதம் சொல்லுகிறது, “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்” (ஏசா. 53:6). அவர் சிலுவையிலே தொங்கிக்கொண்டிருந்தபோது, உலகத்தில் இருந்த எல்லா ஜனங்களையும் சிதறுண்ட ஆடுகளைப்போல் அவருடைய கண்கள் கண்டன. இயேசு அவர்களுக்காக மனதுருகினார்.

இயேசு இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் என்ன? வேதம் சொல்லுகிறது, “இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” (லூக். 19:10). காணாமற்போன ஆடுகளையும், சிதறுண்ட ஆடுகளையும் தேடியே அவர் வந்தார். இரட்சிக்கப்பட்டவர்களை சபையிலே அநுதினமும் கூட்டிக் கொண்டுவந்தார். கர்த்தர் இந்த ஆடுகளைக் கூட்டி ஒன்றாய்ச் சேர்த்ததின் நோக்கமே ஒரு மந்தைக்குள் கொண்டுவரவேண்டுமென்பதாகும்.

நல்ல மேய்ப்பன் ஆடுகளைத் தேடி வருகிறான். ஆடுகளுக்காக உத்தரவாதம் செய்கிறான். ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கவும் அவன் தயங்குவதில்லை. ஆதாம் பாவம் செய்து விருட்சங்களுக்குள்ளே ஒளிந்திருந்தபோது, இந்த ஆடு வேண்டாம் என்று கர்த்தர் புறக்கணித்துவிடவில்லை. ‘ஆதாமே எங்கே இருக்கிறாய்?’ என்று மேய்ப்பனுக்கே உரிய பாசத்தோடும், மனதுருக்கத்தோடும் தேடி வந்தார்.

இன்றைக்கும் அவரைவிட்டு பின்மாற்றத்திலே தூரமாய்ப்போனவர்களையும் பாசத்தோடு தேடித்தேடி அலைகிறார். கர்த்தர் சொல்லுகிறார், “எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படிச் செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது” (ஓசியா 11:8).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய மந்தைக்குள் உள்ள ஆடாய்க் காணப்படுகிறீர்களா? அல்லது பின்மாற்றத்தில் போய்விட்ட ஆடுகளாய் இருக்கிறீர்களா? இன்றைக்கு கர்த்தர் அன்போடு உங்களைத் தேடிவருகிறார். அவருடைய கிருபைக்குள்ளே ஓடி வந்துவிடுங்கள்.

நினைவிற்கு:- “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.