No products in the cart.
Sep – 20 – நீர் ஏறின கழுதை!
“உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னை கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? என்றது” (எண். 22:28,30).
கழுதையைக் குறித்து ஏராளமான குறிப்புகள் வேதத்திலே காணப்படுகின்றன. ஆபிரகாம் தன் மகனாகிய ஈசாக்கை பலி செலுத்த மோரியா மலைக்கு கொண்டு போகும் போது கழுதையின் மேல் சேணம் வைத்துச் சென்றார் என்று அறியலாம் (ஆதி. 22:3). யாக்கோபின் குமாரர் தானியம் வாங்க எகிப்துக்குச் செல்லும்போது, கழுதையிலே சென்றார்கள். தானியத்தை கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு வந்தார்கள் என்று அறியலாம் (ஆதி. 42:26).
ஆனால், கர்த்தர் கழுதையின் வாயை திறந்து பேசும்படியாக செய்ததுதான் பெரிய அற்புதம். கழுதையை பேச வைத்து பெரிய தீர்க்கதரிசியை உணர்த்தினார். எப்படி சேவலை கூவ வைத்து பேதுருவை உணர்த்தினாரோ, அது போல பிலேயாம் தீர்க்கதரிசி கழுதை மூலமாக உணர்த்தப்பட்டார்.
பாருங்கள், கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தோடு வழியிலே நிற்பதைக் கண்ட கழுதை விலகியது. ஆனால், பிலேயாமோ அதை அறியாமல் கழுதையை அடித்துக் கொண்டேயிருந்தார். அந்த கழுதை தன் எஜமான் மேல் மிகுந்த விசுவாசமாய் தொடர்ந்து முன்னேற முயன்றும் முடியாமற் போனது.
நம்மைச் சூழ பல மிருகங்களும், பறவைகளும் இருக்கின்றன. அவைகள் பல வேளைகளிலே கர்த்தருடைய அசைவாடுதலை உணருகின்றன. கர்த்தருடைய வழிநடத்துதலை உணருகின்றன. கர்த்தருக்கு நூற்றுக்கு நூறு கீழ்ப்படிகின்றன. ஆனால், மனிதனோ, கண் இருந்தும் குருடனாய், செவிகள் இருந்தும் செவிடனாய், மனம் போன போக்கிலே சென்று கொண்டிருக்கிறான்.
கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார். அப்பொழுது தான் கர்த்தருடைய தூதன் தனக்கு முன்பாக உருவின பட்டயத்தோடு நிற்கிறதை கண்டு தலை குனிந்து முகம் குப்புற விழுந்து பணிந்தான். உங்களுடைய ஆவிக்குரிய கண்கள் எப்பொழுதும் திறந்திருக்கவேண்டியது அவசியம். உங்களுடைய செவிகள் கர்த்தருடைய சித்தத்துக்கு திறந்திருக்க வேண்டியது அவசியம். உங்களுடைய இருதயம் கர்த்தருடைய சித்தத்திற்குப் பூரணமாய் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
பாருங்கள்! புதிய ஏற்பாட்டிலே. நல்ல சமாரியனுடைய கழுதை எவ்வளவு பொறுமையுள்ளதாயிருந்தது! காயப்பட்ட மனிதனை அந்த கழுதை கஷ்டப்பட்டு சுமந்து சென்றது. அந்த கழுதை இல்லாவிட்டால் அந்த நல்ல சமாரியன் செய்த உதவி பூரணமாய் இருந்திருக்க முடியுமா? அவன் சத்திரக்காரனுடைய இருப்பிடத்திற்கு சென்று சேர்ந்திருக்க முடியுமா?
அந்த கழுதை எஜமானுடைய பாரத்தை தன் பாரமாகக் கொண்டு சுமந்தது. பிள்ளைகளின் பாரத்தை பெற்றோர்கள் சுமக்கிறார்கள். ஊழியர்களின் பாரத்தை விசுவாசிகள் சுமக்கிறார்கள். கர்த்தரோ, உங்கள் எல்லாருடைய பாரத்தையும் தன் மேல் சுமந்தாரே. அவர் உங்களுக்கு சுமைதாங்கியாய் மாறினாரே. அந்த அன்பை எப்படி மறக்க முடியும்?
நினைவிற்கு :- “இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும், இரட்சிக்கிறவரும், தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்” (சகரியா 9:9).