AppamAppam - Tamil

மார்ச் 26 – நீதிமான்களாக்குகிறார்!

“எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” (ரோமர் 8:30).

தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை நீதிமான்களாக்குகிறார். அவர்களுடைய அநீதிகளையெல்லாம் தாமே சுமந்து நீதியின் வஸ்திரத்தை அவர்களுக்குத் தரிப்பிக்கிறார். அதற்காகவே பாவமறியாத அவர் பாவமானார்.

ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தார். அதை தேவன் அவருக்கு நீதியாக எண்ணினார். அப்.பவுல் சொல்லுகிறார், “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோம.5:1). தேவன் உங்களை நீதிமானாக்கியிருக்கிறபடியால் யாரும் உங்களைக் குற்றஞ்சாட்டவோ, உங்கள்மேல் கைபோடவோ முடியாது.

அப்.பேதுரு, “நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமை செய்கிறவன் யார்?” (1 பேதுரு 3:13) என்று கேட்கிறார். ஒருவேளை, உங்களை மற்றவர்கள் அவதூறாய்ப் பேசிக் காயப்படுத்தியிருந்தாலும் கலங்காதிருங்கள். உங்களுடைய உள்ளத்தில் ஏற்பட்ட ஆழமான காயங்களை எண்ணி மனம் சோர்ந்துபோகாதிருங்கள்! மற்றவர்கள் பேசிய துக்கமான வார்த்தைகளினால் அதைரியம் அடைந்துபோகாதிருங்கள்!

நீங்கள் எப்போது காயமடைகிறீர்களோ அப்போது உங்களுக்காகக் காயப்பட்ட இயேசுவை நோக்கிப் பாருங்கள். எப்போது நீங்கள் வேதனையினால் தவிக்கிறீர்களோ அப்போது உங்களைக் காயங்கட்ட நல்ல சமாரியனாய் உங்களண்டை வருகிற இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் மனதுருக்கத்தோடு உங்களுடைய அருகிலே வந்து தம் இரத்தமாகிய திராட்சரசத்தினாலும், பரிசுத்த ஆவியாகிய எண்ணெயினாலும், உங்களுடைய காயங்களைக் கட்டுவார். உங்களுக்கு ஆறுதல் செய்வார்.

மற்றவர்கள் உங்களுக்கு விரோதமாய் எழும்பும்போது கிறிஸ்து நடந்து வந்த பாதையை நோக்கிப்பாருங்கள். அவரை பரிசேயர் எவ்வளவு துணிகரமாய்க் குற்றஞ்சாட்டினார்கள். பெயர்செபூலின் தலைவன், பிசாசு பிடித்தவன் என்றெல்லாம் சொன்னார்கள். ஜனங்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்து பரபாசைத் தெரிந்துகொண்டார்கள். அவரை சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள். அவரைப் பரியாசம் பண்ணினார்கள். அவர் அதையெல்லாம் பொறுமையோடு சகித்தார். அந்த இயேசு உங்கள் பட்சத்திலிருக்கிறார்.

வேதம் சொல்லுகிறது, “எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்” (ஏசா. 54:15). ஆகவே, கலங்காதிருங்கள்! உங்களுக்கு விரோதமாய் கூடுகிறவர்களும், உங்களுக்கு விரோதமாகக் கிரியை செய்கிறவர்களும் நிச்சயமாய் உங்கள் பட்சத்தில் வருவார்கள்.

நினைவிற்கு:- “உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்” (ஏசா. 61:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.