No products in the cart.
மார்ச் 25 – வியாதியின்மேல் ஜெயம் தருகிறார்!
“நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத். 15:26).
நீங்கள் வியாதிகளின்மேல் ஜெயங்கொள்ளவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். உங்களுடைய சரீரம் கர்த்தரால் உருவாக்கப்பட்டதென்பதாலும், சரீரத்தின் நோய்களையும், பெலவீனங்களையும் கர்த்தர் சிலுவையிலே சுமந்து தீர்த்துவிட்டபடியினாலும், நீங்கள் வியாதியோடு தத்தளிக்கவேண்டிய அவசியமில்லை.
நீங்கள் ஜெபிக்கும்போது “பரலோகத்தில் உம்முடைய சித்தம் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று சொல்லுகிறீர்கள். பரலோகத்திலே வியாதியும் கிடையாது. நோயும் கிடையாது. தேவதூதர்கள் நோய்வாய்ப்பட்டதுமில்லை. இயேசு பூமியில் இருந்த நாட்களில் வியாதியின்மேல் ஜெயங்கொண்டவராகவே வாழ்ந்தார்.
அவருடைய சுவிசேஷ ஊழியம், ஜெப ஊழியம், உபவாச ஊழியம் ஆகியவை வியாதியினாலோ, பெலவீனத்தினாலோ ஒரு நாளும் தடைப்பட்டதில்லை. காரணம், வியாதிகளால் அவரை மேற்கொள்ள இயலவில்லை என்பதுதான். குஷ்டரோகியின்மேல் கூசாமல் தன் கைகளை நீட்டித் தொட்டார். குஷ்டரோகம் அவரை மேற்கொள்ளவில்லை. உங்களுடைய பெலவீனங்களையும், நோய்களையும் இயேசுவானவர் சுமந்ததினால்தான், நான் வியாதியாயிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்று அவர் சொன்னார். தம்முடைய பிள்ளைகளின் பெலவீனங்களைத் தாமே சுமந்து தீர்க்கச் சித்தமானார்.
ஏன் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு வியாதிகள் வருகின்றன என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். வியாதி வருவதன் முக்கிய காரணம் பாவம்தான். திமிர்வாதக்காரனை இயேசுவண்டை கொண்டுவந்தபோது, அவனைக் குணமாக்குவதற்கு முன்பாகவே இயேசு அவனைப் பார்த்து, “மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” (மத். 9:2) என்றார். அதுபோலவே பெதஸ்தா குளத்தண்டையில் முப்பத்தெட்டு வருஷங்கள் வியாதியாய் இருந்த மனுஷனை சுகமாக்கும்போதும் இயேசு அவனைப் பார்த்து, “இதோ நீ சொஸ்தமானாய்; அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே” (யோவா. 5:14) என்று சொன்னார்.
தேவபிள்ளைகளே, பாவம் உங்களை நெருங்காதபடி காத்துக்கொண்டால் வியாதிகள் உங்களை நெருங்குவதில்லை. சில வேளைகளில் பெற்றோர் மற்றும் முற்பிதாக்கள் ஆகியோரின் பாவங்களினாலும், சாபங்களினாலும்கூட வியாதி வருகிறது. இதை அநேகர் நம்புவதில்லை. தாவீது ராஜா பாவம் செய்ததினால், அவனுடைய பிள்ளையைக் கர்த்தர் அடித்தார் என்றும், அந்த பிள்ளை வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது என்றும் 2 சாமு. 12:14,15ல் வாசிக்கிறோம்.
ஆகவே அப்படிப்பட்ட வேளைகளில், மற்றவர்களுக்கு வியாதி ஏற்பட நாம் காரணமாய் இருந்திருக்கிறோமா என்பதை ஆராய்ந்து பார்த்து, அப்பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுங்கள். வேதம் சொல்லுகிறது, “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள்” (யாக். 5:16).
நினைவிற்கு:- “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத். 8:17).