AppamAppam - Tamil

மார்ச் 14 – காப்பார்!

“வழுவாதபடி உங்களைக் காக்கவும் ……” (யூதா. 1:24).

வேதத்திலுள்ள அறுபத்தாறு புத்தகங்களிலே யூதாவின் புத்தகம் அறுபத்தைந்தாவது புத்தகமாக வருகிறது. அது ஒரு பொதுவான நிருபமாய் எழுதப்பட்டிருக்கிறது. அதில் இருப்பது ஒரே ஒரு அதிகாரம்தான்.

அது ஒரே ஒரு அதிகாரமாய் இருந்தபோதிலும் அந்த அதிகாரத்தின் இறுதிப் பகுதியிலே அப். யூதா சுட்டிக்காண்பிப்பது, “கர்த்தர் உங்களை வழுவாதபடிக் காக்க வல்லமையுள்ளவர்” என்பதாகும். கர்த்தர் உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை வழுவாதபடிப் பாதுகாக்க வல்லமையுள்ளவர்.

வால்பாறையை அடுத்து ஹை ஃபாரஸ்ட் (High Forest) என்ற ஒரு எஸ்டேட் இருக்கிறது. அந்த எஸ்டேட்டின் அருகே மிக உயரமான குன்று ஒன்று இருக்கிறது. அந்த குன்று “நம்பர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. அந்த நம்பர் பாறை செங்குத்தானதும், மிக உயரமானதுமான ஒரு பாறை.

அதின் மேலிருந்து கீழே பார்த்தால் ஆயிரமாயிரம் அடி ஆழமான பாதாளம்போல இருக்கும். நேராக செங்குத்தாக கீழே ஓடும் ஒரு பெரிய நதி ஒரு நூலைப் போன்று காட்சியளிக்கும். எங்கும் பாறையாக இருக்கும். அந்த இடத்திலிருந்து யாராவது வழுக்கி விழுவார்கள் என்றால் அவர்களுடைய சரீரமெல்லாம் ஆங்காங்கே பாறைகளில் மோதி சிதறிப்போகும். ஒரு துண்டு எலும்பு கூட மிஞ்சாது.

அந்த இடத்திற்கு அருகில் செல்லும்போதே அங்குள்ள அநேக அசுத்த ஆவிகள் நமது தலையைச் சுற்றப்பண்ணி, காலைச் சறுக்கப்பண்ணி பாதாளத்திற்குள் இழுத்துச் செல்லுவதைப் போன்ற உணர்வு உண்டாகும். அந்த நம்பர் பாறையிலிருந்து வழுக்கி விழுவதைவிட கொடுமையான ஒன்றுதான் பாவம் செய்து பாதாளத்தில் வழுவி விழுவதாகும். அது எத்தனை பரிதாபமானது! அது நித்திய வேதனையானதும்கூட.

யூதாவின் நிருபத்தில் ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல் பெருமையினால் விழுந்த யூதர்களுடைய சரித்திரத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. தேவதூதர்களாய் இருந்த அவர்கள் விழுந்தபோது பிசாசுகளாய் மாறினார்கள். நரகக் கடலிலே நித்தியமாக தள்ளப்பட்டார்கள்.

மனமேட்டிமையும், பெருமையும், இச்சைகளும், விபச்சார ஆவிகளும், பாவ சோதனைகளும், உலகத்தின் மயக்கங்களும், உலகத்தின் ஆசாபாசங்களும் ஒரு மனுஷனை வழிவிலகிப் போகப்பண்ணுகிறது. அதே நேரத்தில் உங்களை வழுவாதபடி காக்க வல்லமையுள்ளவர் இன்றைக்கும் ஜீவனுள்ளவராய் இருக்கிறார்.

தேவனுடைய பலத்த கரம் உங்களைத் தாங்கி நிலைநிறுத்த வல்லமையுள்ளது. உங்கள் கால்கள் சறுக்கும்போதெல்லாம் தேவனுடைய கிருபை உங்களைத் தாங்குகிறது என்பதை நீங்கள் மறந்துபோய்விடக்கூடாது. தேவபிள்ளைகளே, தேவ கிருபை உங்களைவிட்டு ஒரு நிமிடம்கூட விலகாதபடிக்கு கவனமாயிருங்கள். உங்கள் ஜெப வாழ்வில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்களை வழுவாதப்படிக் காப்பார்.

நினைவிற்கு:- “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்” (2 தீமோ. 1:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.