AppamAppam - Tamil

மார்ச் 06 – நடத்துவார்!

“கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்” (ஏசா.58:11).

கர்த்தர் உங்களை கரம்பிடித்து, அன்போடும் மனதுருக்கத்தோடும் உலகத்தின் முடிவுபரியந்தமும் நடத்துவார். ஆனால் அவ்வாறு அவரால் நடத்தப்பட நீங்கள் உங்களை முற்றிலும் அர்ப்பணித்திருக்க வேண்டும். ‘ஆண்டவரே, என் சிந்தனைகளையும், நினைவுகளையும், நீதியின் பாதையிலே நடத்தும்’ என்று சொல்லி ஜெபிக்கவேண்டும்.

தாவீது ராஜா, “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்” (சங். 23:1,2) என்று உற்சாகமாய் சொன்னார். வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் கர்த்தரே மேய்ப்பராய் நின்று உங்களை வழிநடத்த வேண்டும். சில பகுதிகளைக் கர்த்தர் நடத்துவதற்கு விட்டுக்கொடுத்தாலும், சில பகுதிகளில் உங்களை நீங்களே நடத்திச்செல்ல விரும்புகிறீர்கள். ஆகவேதான் பல வேளைகளில் தேவனுடைய சித்தத்துக்கும், உங்களுடைய வழிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

கர்த்தர் உணவும், உடையும் தருகிறதற்கு மட்டுமே மேய்ப்பன் அல்ல, உங்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள், செயல்கள் எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்துகிற மேய்ப்பனாய் அவர் இருக்கிறார். நீங்கள் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்பட வேண்டியதில்லை. அவரது கோலும் தடியும் உங்களைத் தேற்றும். நீங்கள் பரலோக ராஜ்யத்துக்கு சென்று சேரும்வரையிலும், நித்தியம்வரையிலும் அவர் உங்களை வழிநடத்துவார். ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும். கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பீர்கள்.

“இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப் போல் நடத்துகிறவரே, செவிகொடும்” (சங்.80:1) என்று சங்கீதக்காரன் ஜெபிப்பதுபோல உள்ளம் உருகி ஜெபியுங்கள். மேய்ப்பன் எல்லா ஆடுகளையும் ஒன்றுபோல நடத்துவதில்லை. மந்தையில், சில கறவல் ஆடுகள் இருக்கும்; சில சினை ஆடுகள் இருக்கும்; சில பெலவீனமான ஆடுகள் இருக்கும்; சில ஊனமுற்ற ஆடுகள் பின்தங்கி நடக்கக்கூடும். ஒவ்வொன்றையும் அதனுடைய நிலைமைக்கு ஏற்றாற்போல மேய்ப்பன் அன்போடு நடத்திச் செல்வான். வேதம் சொல்லுகிறது, “மேய்ப்பனைப்போல தனது மந்தையை மேய்ப்பார், ஆட்டுக்குட்டிகளை தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்” (ஏசா.40:11).

‘நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, தனது ஜீவனையே தரக்கூடிய ஒருவரை நாம் மேய்ப்பராகக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! கர்த்தர் எவ்வளவு அருமையாய் நம்மை வழிநடத்திச் செல்கிறார் என்பதை உணர்ந்தவர்களாய், அவருக்குத் துதி தோத்திரங்களை ஏறெடுங்கள்.

நினைவிற்கு:- “உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?” (லூக்.15:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.