No products in the cart.
மார்ச் 05 – வெளிச்சமாக்குவார்!
“தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்” (சங்.18:28).
“ஆண்டவரே, என் விளக்கை ஏற்றும், என் இருள் வெளிச்சமாகட்டும், என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உதவி செய்யும்” என்று தாவீது அன்போடு கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்கிறார். எத்தனை அருமையான ஜெபம் இது!
பெரிய தொழிற்சாலைகளை ஜனாதிபதியோ அல்லது மந்திரிகளோ திறந்து வைக்கும்போது, அங்கு விளக்கை ஏற்றுகிறார்கள். அந்த தொழிற்சாலை முழுவதும் வெளிச்சம் பரவுகிறது. வெளிச்சம் ஒரு ஒளிமயமான ஆரம்பத்திற்கு அடையாளமாக விளங்குகிறது. இருளை அகற்றும் சக்தி ஒளிக்கு இருப்பதால் அது ஆசீர்வாதத்தின் அடையாளமாக மக்களால் கருதப்படுகிறது.
மனிதன் இருளை நீக்குவதற்கு பல வகையான விளக்குகளைக் கண்டு பிடித்தான். மிருகங்களின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் விளக்குகளைப் பார்க்கிறோம். மெழுகுவர்த்திகளைப் பார்க்கிறோம். மண்ணெண்ணெய் விளக்குகளைப் பார்க்கிறோம். தற்போது மின்சார விளக்குகள் இருளை நீக்கி நமக்கு ஒளி கொடுக்கின்றன.
ஆதியில் கர்த்தரோ, முழு உலகத்திற்கும் ஒளி கொடுக்கத் தீர்மானித்தார். முதலிலே பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது. உலகம் முழுவதையும் இருள் ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததை கர்த்தர் கண்டபோது, வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் அழகாய் வெளிச்சம் வீசின. அந்த வெளிச்சம் உலகத்திலுள்ள காரிருளை அகற்றி, பிரகாசமான மகிமையைக் கொண்டு வந்தன.
ஆனால் தாவீது, “என் விளக்கை ஏற்றுவீர்” என்று ஜெபிக்கிறார். அது என்ன விளக்கு? அதுதான் அவருடைய உள்ளமாகிய விளக்கு. பாவ இருள் ஆத்துமாவை சூழ்ந்துகொள்ளும்போது, வாழ்க்கையில் அந்தகாரம் சூழ்ந்துகொள்ளுகிறது. தோல்வியின் இருள், சாபத்தின் இருள், அந்தகார ஆதிக்கங்களின் இருள் உள்ளத்தை கவ்விப் பிடிக்கிறது.
எந்த ஒரு மனுஷன் பாவத்திலும், அக்கிரமத்திலும் வாழ்கிறானோ அவன் நீதியின் சூரியனாகிய கர்த்தரைவிட்டு விலகிச் சென்றுவிடுகிறான். அவனுடைய வாழ்க்கையில் இருள் பற்றிக்கொள்கிறது. வேதம் சொல்லுகிறது, “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசா.59:2).
ஆம். நீதியின் சூரியனாகிய கர்த்தரை உங்கள் பாவங்களினாலே மறைத்துக் கொள்ளும்போது, கர்த்தருடைய வெளிச்சம் உங்கள் வாழ்க்கையில் வீசமுடியாதபடி இருள் சூழ்ந்துகொள்ளுகிறது. தேவபிள்ளைகளே, என் விளக்கையும் ஏற்றும் என்று ஜெபிக்கும்போது கர்த்தர் நிச்சயமாகவே உங்களுடைய விளக்கையும் ஏற்றி உங்கள் வாழ்க்கையையும் பிரகாசிக்கச் செய்வார்.
நினைவிற்கு:- “மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்” (நீதி.20:27).