No products in the cart.
மார்ச் 03 – அனுப்புவார்!
“அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்” (சங்.107:20).
நாம் பல செய்திகளை கடிதங்கள் மூலம் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அல்லது, தொலைபேசி போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் கர்த்தரோ தம்முடைய வசனத்தை நமக்கு நேரிடையாக அனுப்புகிறார். இன்றைக்கு உங்களுக்கு நேராக, உங்கள் குடும்பத்துக்கு நேராக தம்முடைய வசனத்தை அனுப்பி தெய்வீக சுகத்தைக் கட்டளையிடுகிறார்
உலகப்பிரகாரமான வார்த்தைகளுக்கும், கர்த்தருடைய வார்த்தைக்கும் பெரிய வித்தியாசமுண்டு. உலகப்பிரகாரமான வார்த்தைகளில் இல்லாத ஆவியும், ஜீவனும், வல்லமையும் கர்த்தருடைய வார்த்தையில் இருக்கின்றன. அவருடைய வசனம் ஆவியும் ஜீவனுமானது. அது ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறது. பேதைகளை ஞானியாக்குகிறது. கர்த்தர் தம்முடைய வசனத்தை அனுப்பி ஜனங்களைக் குணமாக்குகிறார்.
இதை விசுவாசித்த நூற்றுக்கு அதிபதி இயேசுவை நோக்கி: “ஆண்டவரே! ….ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” (மத். 8:8) என்றார். ஒரு வார்த்தையினால் முழு உலகத்தையும் சிருஷ்டித்தவர், வெளிச்சம் உண்டாகக்கடவது என்ற ஒரு வார்த்தையினால் வெளிச்சத்தை உண்டாக்கினவர், சூரியன், சந்திரன், நட்சத்திரங்களையெல்லாம் உருவாக்கினவர், உங்களுக்கும் தம்முடைய வார்த்தையை அனுப்பி, தெய்வீக சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தராமல் இருப்பாரோ?
வேதம் சொல்லுகிறது, “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (மத்.12:34). கர்த்தருடைய இருதயத்திலே மனதுருக்கமும், உங்கள்மேல் அளவற்ற அன்பும் நிறைந்திருக்கிறபடியினாலே அவருடைய வாய் தெய்வீக சுகத்தைப் பேசுகிறது.
இயேசு சொன்னார், “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசா. 55:11). எனவே பெலனில்லாத உங்களுடைய சரீரத்திலே தேவ பெலனுண்டாகும். நோயால் வாடின உங்களுடைய சரீரத்திலே தேவனுடைய ஆரோக்கியம் உண்டாகும்
அவர் வேத வசனத்தை அனுப்பும்போது, சமீபமென்றும் இல்லை, தூரம் என்றும் இல்லை. மனிதனால் வானவெளியிலே செலுத்தப்படுகிற ஒளி அலைகளே ஒரு வினாடியில் உலகத்தை ஏழு முறை சுற்றி வரக்கூடுமானால், கர்த்தருடைய வார்த்தை எவ்வளவு வல்லமையாய், வேகமாய் கடந்து செல்லக்கூடும்! “அவர் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ” (எரே. 23:23). தேவபிள்ளைகளே, உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயிருக்கிற வசனத்தை சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள் (யாக்.1:21). அப்பொழுது, நிச்சயமாகவே தெய்வீக ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள்.
நினைவிற்கு:- “அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களை யெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்” (சங்.103:3,4,5).