AppamAppam - Tamil

பிப்ரவரி 24 – விசுவாசம்!

“விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நீங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்” (2 கொரி. 4:13).

விசுவாசத்தின் நான்கு வகைகளைக் குறித்து வேதத்திலே வாசிக்கலாம். முதலாவது, இயற்கையான விசுவாசம், இரண்டாவது அஸ்திபார உபதேசமாகிய விசுவாசம். இது தேவன் பேரில் வைக்கும் விசுவாசம் என்றும் அழைக்கப்படுகிறது. மூன்றாவதாக, ஆவியின் வரமாகிய விசுவாசம். நான்காவதாக, ஆவியின் கனியாகிய விசுவாசம்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் விசுவாசம் அவசியம். அந்த விசுவாசத்திலே நீங்கள் பெருகவேண்டும். ஆவியிலே நிரம்பி விசுவாச கனிகளைக் கொடுக்க வேண்டும். இயேசுவின் சீஷர்களே தங்களுக்கு விசுவாசம் இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்” என்று கேட்டார்கள் (லூக். 17:5).

விசுவாசம் இல்லாமல் துக்கத்தோடு நின்ற மார்த்தாள், மரியாள் வாழ்க்கையிலே அவர் விசுவாசத்தை உருவாக்கத் தீர்மானித்தார். “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” (யோவான் 11:25) என்று அவர் சொன்னபோதுகூட அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. அவிசுவாசமுள்ளவர்களாய், “கடைசி நாளில் எல்லோரும் உயிர்த்தெழும்பும்போது என் சகோதரனும் உயிர்த்தெழுவான்” என்றும், “நான்கு நாட்களுக்கு முன் நீர் வந்திருந்தால் எங்கள் சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்றும் அவர்கள் அவிசுவாசத்துடன் சொன்னார்கள். கர்த்தர் அவர்களுக்கு விசுவாசத்தைப் புகட்டும்படி லாசருவை உயிரோடு எழுப்பிக் கொடுத்தார்.

கர்த்தர் செய்த அற்புதங்களை வேதப்புத்தகத்தில் வாசிக்க வாசிக்க நமது விசுவாசம் அதிகரிக்கிறது. வல்லமையான சாட்சிகளைக் கேட்கும்போது நமது விசுவாசம் கொழுந்துவிட்டு எரிகிறது. ஸ்தேவானைக் குறித்து, “அவர் விசுவாசத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிறைந்தவராய் இருந்தார்” என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே, ஜனங்களுக்குள்ளே மாபெரும் அற்புதமான காரியங்களையெல்லாம் அவரால் செய்ய முடிந்தது.

ஆவியின் வரமாக, இந்த விசுவாசம் உங்களுக்குள்ளே வரும்போது, கர்த்தருக்காக அரிய பெரிய காரியங்களை செய்வதற்கு நீங்கள் திட்டமிடுவீர்கள். ஆண்டவருக்காக மிகப்பெரிய ஆலயத்தைக் கட்ட, ஆண்டவருக்காக லட்ச, லட்சமான ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய, அற்புதங்களையும் அதிசயங்களையும் கொண்டுவர இந்த விசுவாச வரம் உங்களுக்கு உதவி செய்கிறது. விசுவாசிக்கிறவன், தேவனுடைய வார்த்தையை நம்பி, அப்படியே ஏற்றுக்கொண்டு, அதைத் தன் வாயினால் அறிக்கையிடுகிறான்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய விசுவாசம் உறுதியாய் இருக்கட்டும். உங்கள் விசுவாசமானது வேத வசனத்தினால் அஸ்திபாரமிடப்பட்டிருக்கட்டும். உங்கள் விசுவாசம் எப்பொழுதும் கிறிஸ்துவையே சார்ந்துகொண்டிருக்கட்டும்.

நினைவிற்கு:- “விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்” (எபி. 11:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.