AppamAppam - Tamil

பிப்ரவரி 22 – அப்பம்!

“நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவான் 6:51).

ஆதியிலே கர்த்தர் மனிதனைச் சிருஷ்டித்து ஏதேன் தோட்டத்திலே வைத்தபோது அவனுடைய உணவுக்கென்று ஜீவ விருட்சத்தின் கனியைக் கொடுத்தார். மனிதன் ஜீவனிலே நிலைத்திருக்கும்படியாகவும், அந்த ஜீவனிலே பெருகிப் பூரணமடையும்படியாகவும் மனிதனுக்கு அதை மகிழ்ச்சியோடு கொடுத்தார்.

ஜீவ விருட்சத்தின் கனியைக் கொடுத்தவர், இஸ்ரவேலருக்கு வானத்திலிருந்து மன்னாவைக் கொடுத்தார், நமக்கோ ஜீவ அப்பத்தைக் கொடுத்திருக்கிறார். அந்த அப்பமே கர்த்தருடைய வார்த்தை. அன்றன்றுள்ள அப்பத்தை இன்று எங்களுக்கு தாரும் என்று ஜெபிக்கும்போது, கர்த்தர் வேத வசனத்திலுள்ள கொழுமையையும், செழுமையையும் உங்களுக்குத் தந்தருளுகிறார். உங்களுடைய ஆத்துமாவில் பெலனையும், சத்துவத்தையும், வல்லமையையும் தந்தருளுகிறார்.

இதைப் புசிக்கத் தவறியதால் அநேக விசுவாசிகள் பெலனற்றுத் தள்ளாடுகிறதைக் காணலாம். அவர்கள் சிறு பிரச்சனை வந்தாலும் சோர்ந்துவிடுகிறார்கள். அவர்கள் அடிக்கடி கீழே விழவேண்டியதாயிருக்கிறது. அவர்கள் ஜீவ அப்பத்தை புசிக்காததே அதன் காரணம். வாக்குத்தத்தங்களை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ளவுமில்லை, விசுவாச வார்த்தைகளை உறுதியோடு பேசவுமில்லை.

கர்த்தர் எப்போதும் தன் பிள்ளைகளுக்கு மிகவும் மேன்மையானதையே கொடுக்கிறார். ஆயுட்கால முழுவதும் வேத வசனங்கள் உங்களுக்கு உணவாக அமைந்திருக்கின்றன. ஒரு வேதப் பண்டிதர் சொன்னார்: “நான் 69 ஆண்டுகளாக வேதப் புத்தகத்தை நன்றாக தியானித்து, ருசித்து, வாசித்திருக்கிறேன். இன்னும் கூட ஆண்டவருடைய பாதபடியிலே அமர்ந்து வேதப் புத்தகத்தை எடுக்கும்போது, நான் ஒரு மாணாக்கனாகவே என்னை எண்ணுகிறேன். ஒரு மனிதன் அறிவுப் பசியோடு பாடப் புத்தகத்தை எப்படி படிப்பானோ, அதைப்போல ஆன்மீக பசியோடு அதை நான் படிக்கிறேன்” என்றார்.

வேதம் சொல்லுகிறது, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” (யோவான். 5:39). தேவன் உங்களுக்கு வேதப்புத்தகத்தை ஒரு நூலகமாகத் தந்திருக்கிறார். சரித்திரப் புத்தகம், சட்டப் புத்தகம், விஞ்ஞானப் புத்தகம், கணக்குப் புத்தகம், ஆலோசனைப் புத்தகம், பாடல் புத்தகம் என எத்தனை எத்தனை வகையான புத்தகங்கள் உண்டோ அத்தனையையும் ஒன்றாகச் சேர்த்து வேதாகமமாக உங்களுடைய கைகளிலே கொடுத்திருக்கிறார்.

ஆகாமியக் கூடாரங்களில் வாசம் பண்ணுகிற ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து வேதத்தை வாசித்துத் தியானிக்கிற ஒரே நாள் நல்லது (சங். 84:10) என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, வேத வசனங்கள் உங்களுக்குச் சிறந்த உணவாக அமையட்டும்.

நினைவிற்கு:- “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்” (ஏசா. 55:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.