No products in the cart.
பிப்ரவரி 19 – கூடாரம்!
“அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்” (ஆமோஸ் 9:12).
பழைய ஏற்பாட்டிலே சொல்லப்பட்ட முதல் கூடாரம் நோவாவின் கூடாரம். நோவா திராட்சரசத்தை குடித்து, வெறித்து தன் கூடாரத்தில் படுத்திருந்தார் (ஆதி. 9:21) என்றும் லோத்துவின் கூடாரம் சோதோமுக்கு நேராக போடப்பட்டிருந்தது (ஆதி. 13:12) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம்.
ஆபிரகாமின் கூடாரம் விசுவாசத்தின் கூடாரம். விசுவாசத்தினாலே அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்துக்கு உடன் சுதந்தரவாளியாகிய ஈசாக்கோடும், யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தார் (எபி. 11:9).
ஈசாக்கின் கூடாரம் தியான கூடாரம். யாக்கோபின் கூடாரம் ஜெபத்தில் தேவனோடு போராடுகிற ஒரு கூடாரம். வேதம் சொல்லுகிறது, “யாக்கோபே, உன் கூடாரங்களும் இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!” (எண். 24:5).
பழைய ஏற்பாட்டில் பல கூடாரங்கள் இருந்தாலும், அவற்றின் மத்தியிலே தாவீதின் கூடாரத்தை மட்டுமே திரும்ப எடுப்பித்து ஸ்தாபிப்பேன் என்று கர்த்தர் வாக்களிக்கிறார். தாவீதின் கூடாரம் ஒரு துதியின் கூடாரமாயிருந்ததே இதன் காரணம். அது ஒரு ஆராதனையின் கூடாரம், ஸ்தோத்தரித்து மகிழும் கூடாரம். வேதம் சொல்லுகிறது, “நீதிமான்களின் கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு” (சங். 118:15).
தாவீதின் காலத்துக்குப் பிறகு அவரைப் போல ஆடிப்பாடி, கீத வாத்தியங்களை இசைத்துத் துதிக்கக்கூடிய பக்தர்களை அதிகமாய்க் காண முடியவில்லை. அதிலும் ஆதி அப்போஸ்தலர்களுடைய நாட்களுக்குப் பிறகு 16ம் நூற்றாண்டு வரையிலும் திருச்சபை வரலாற்றில் பெரிய எழுப்புதல் ஒன்றுமே காணப்படவில்லை.
ஆனால், கர்த்தருடைய வருகைக்கு முன்பாக விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை ‘நான் திரும்ப எடுப்பித்து கட்டுவேன்’ என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். தன்னுடைய வருகைக்கு முன்பாக ஒரு ஆராதனையின் அபிஷேகத்தை தேவனுடைய பிள்ளைகள் மத்தியிலே கர்த்தர் ஊற்ற விரும்புகிறார். துதித்து, ஸ்தோத்தரித்து, கர்த்தரை மகிமைப்படுத்துகிற தாவீதின் சந்ததியை நிச்சயமாகவே அவர் எழுப்புவார்.
கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாகிவிட்டது. மணவாட்டியாகிய நீங்கள் ஆடல் பாடலின் சத்தத்தோடும், துதியோடும், ஸ்தோத்திரத்தோடும், மகிழ்ச்சியோடும் அவரை எதிர்நோக்கவேண்டுமல்லவா? துக்கமுகமும், முறுமுறுப்பும் உங்களுக்குரியவை அல்ல.
தேவபிள்ளைகளே, இந்தக் கடைசி காலத்தில் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணி, மன மகிழ்ச்சியினால் நிரப்பியருள விரும்புகிறார். தாவீதின் கூடாரத்தை நிச்சயமாகவே அவர் மறுபடியும் ஸ்தாபிப்பார்.
நினைவிற்கு:- “திரளான ஜனங்களின் சத்தத்துக்கொத்த வெகு கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட ஜாதிகளுடைய ராஜ்யங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது” (ஏசா. 13:4).