No products in the cart.
பிப்ரவரி 06 – பெரியவனாக்கும்!
“உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்” (சங். 18:35).
எப்பொழுதும் கர்த்தரைச் சார்ந்திருப்பதே தாவீது ராஜாவின் ஒரு விசேஷ குணம் ஆகும். ‘என் பெலத்தினால், என் ஞானத்தினால் உயர்வேன்’ என்றெல்லாம் ஒரு போதும் அவர் பெருமை பாராட்டினதில்லை. கர்த்தரையே சார்ந்துகொண்டு, ‘கர்த்தாவே உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்’ என்று தன்னைத் தாழ்த்தி கூறுகிறார். ஆம், கர்த்தருடைய காருணியமே ஒருவனைப் பெரியவனாக்குகிறது.
சிலர் தங்களுடைய புத்திக்கூர்மையினால் முன்னேறிவிடுவோம் என்று எண்ணுகிறார்கள். சிலர் தங்களுடைய பேச்சுத்திறமையினால் பெரிய அரசியல் தலைவர்களாகிவிடுவோம் என்று எண்ணுகிறார்கள். வேறு சிலர் தங்களுடைய இனத்தவரைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்களை தூக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவராகிலும் தங்கள் சுய முயற்சியினால் பெரியவர்களாகியிருந்ததை காணமுடிவதில்லை.
ஆனால் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த உயர்வை நீங்கள் நினைக்கும்போது, கர்த்தருடைய காருணியமே உங்களை உயர்த்திற்று என்பதை உணர முடியும். கர்த்தர் ஒருவன்மேல் கிருபையாய் காருணியம் வைக்கிறார். அந்தக் காருணியத்தால் காரியசித்தி அடையும்படி செய்கிறார். அந்தக் காரியசித்தியினால்தான் தேவனுடைய ஆசீர்வாதம் வெளிப்படுகிறது.
கர்த்தர் ஒரு மனுஷனை நேசித்து, அவன்மேல் தன் காருணியத்தை வைக்கும்போது, அந்த காருணியம் கடைசி வரையிலும் அவனைச் சூழ்ந்துகொள்ளுகிறது. சற்று சிந்தித்துப்பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையிலே எத்தனையோ முறை வழிவிலகிப் போகக்கூடிய சந்தர்ப்பங்கள் வந்திருக்கக்கூடும். பின்மாற்றத்தின் அனுபவங்கள் வந்திருக்கக்கூடும்.
அந்த நேரங்களிளெல்லாம் கர்த்தர் உங்களைக் கைவிடாமல் தம்மண்டை இழுத்துக் கொண்டதன் காரணம் என்ன? அது அவருடைய காருணியமே. கர்த்தர் சொல்லுகிறார்: அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன் (எரே. 31:3).
கர்த்தருடைய காருணியங்களை எண்ணி, அவரை மனப்பூர்வமாகத் துதித்து, ஸ்தோத்தரிப்பீர்களாக. அவருடைய காருணியம் உங்களைச் சூழ்ந்துகொள்ளுகிறது. அவருடைய காருணியம் உங்களை உயர்த்துகிறது. அவருடைய காருணியம் உங்களை அவர் பக்கமாக இழுத்துக்கொள்ளுகிறது.
கர்த்தருடைய காருணியத்தைத் தியானித்த சகரியா தீர்க்கதரிசி, “அவருடைய காருணியம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது?” (சக. 9:17) என்று புகழ்ந்து போற்றுகிறார். தேவபிள்ளைகளே, அவருடைய காருணியத்தை சார்ந்துகொள்ளுங்கள். அவருடைய காருணியம் உங்களைப் பெரியவர்களாக்கும்.
நினைவிற்கு:- “தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே …. மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” (2 பேதுரு 1:3,4).