No products in the cart.
பிப்ரவரி 04 – சேவிப்போம்!
“நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15).
“கர்த்தரையே சேவிப்போம்” என்று யோசுவா திட்டமும் தெளிவுமாய் சொல்லுகிறார். கர்த்தரை என்று சொல்லாமல் கர்த்தரையே என்று சொல்லுவதைப் பாருங்கள். இது வேறு யாரையும் நாங்கள் சேவிக்க மாட்டோம் என்ற தீர்மானத்தை திட்டமாய்த் தெரிவிக்கிறது.
இயேசு சொன்னார், “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்” (மத். 6:24). இந்த உலகத்தில் இரண்டு எஜமான்கள் உண்டு. ஒன்று இயேசுகிறிஸ்து. அடுத்தது சாத்தான். இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் உங்களால் பிரியப்படுத்த முடியாது. இயேசுவை நேசித்து சாத்தானை வெறுக்கத்தான் வேண்டும். முதலாவது, நீங்கள் இயேசுகிறிஸ்துவில் அன்பு வைத்தால் அவரையே சேவியுங்கள்.
இரண்டாவது, கர்த்தரை நீங்கள் சேவிக்கும்போது முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் சேவிக்க வேண்டும். முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் என்றால் நூற்றுக்கு நூறு சேவிப்பது என்பதே அதன் அர்த்தம். பள்ளிக்கூடத்தில் படிக்கிற பிள்ளைகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து முதலாவதாக வர வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக்கொண்டு முயலுவதைப்போல கர்த்தரையே சேவிக்கிறதில் நீங்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும். “நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்” (1 சாமு. 12:24).
மூன்றாவது, நீங்கள் பயத்துடன் கர்த்தரைச் சேவிக்க வேண்டும். “பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்” (சங். 2:11) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். இந்த பயம் என்பது ஏதோ நோய்களைத் தந்துவிடுவார், நரகத்திற்கு அனுப்பிவிடுவார், தண்டித்து விடுவார் போன்ற பயம் அல்ல. இது கனதிற்குரிய பயம். கர்த்தரை நேசிக்கிறதினால் வருகிற தேவ பயமாகும். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம் (நீதி 8:13).
நான்காவது, நீங்கள் உத்தம இருதயத்தோடும், உற்சாக மனதோடும் கர்த்தரைச் சேவிக்க வேண்டும். அப்படித்தான் தாவீது தன் மகனாகிய சாலொமோனுக்கு புத்தி சொல்லிக் கொடுத்தார் (1 நாளா. 28:9). மனுஷனுக்கென்று ஊழியம் செய்யாமல் கர்த்தருக்கென்று நல்மனதுடனே ஊழியம் செய்ய வேண்டும். உத்தம இருதயத்தோடும், உற்சாக மனதோடும், அவரது ஊழியத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும்.
ஐந்தாவது, மகிழ்ச்சியோடு கர்த்தரைச் சேவியுங்கள். வேதம் சொல்லுகிறது. “மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்து ஆனந்த சத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்” (சங். 100:2). அவருடைய சமுகமே உங்களுக்கு ஆனந்தம். அவருடைய சந்நிதானமே பேரின்பம். ஆண்டவரைச் சேவிப்பது உங்களுடைய உள்ளத்தில் ஆறுதலைத் தருகிறது. தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்நாளெல்லாம் கர்த்தரையே சேவிப்பீர்களாக. அவரைச் சேவிப்பதும், அவருக்கு ஊழியம் செய்வதுமே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாக்கியங்களாகும்.
நினைவிற்கு:- “வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்” (அப். 20:19).