No products in the cart.
பெப்ருவரி 01 – ஒட்டகம்!
“இன்னும் மொண்டு வரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்” (ஆதி. 24:20).
எலியேசர் தனது எஜமானாகிய ஆபிரகாமின் குமாரனுக்கு பெண் பார்க்கவரும் போது நிறைய ஒட்டகங்களையும் கூடவே அழைத்து வந்தார் என்றும், தாகமாயிருந்த அந்த ஒட்டகங்களை அவர் ஒரு தண்ணீர்த் துரவண்டை நிறுத்தினார் என்றும், ரெபேக்காள் அந்த துரவண்டையில் ஓடிவந்து அவனுக்கும், அவனது ஒட்டகங்களுக்கும் தண்ணீரை மொண்டு வார்த்தாள் என்றும் வேதம் சொல்லுகிறது.
ஒட்டகம் உட்காரும் போதும், எழுந்திருக்கும் போதும், தன்மேல் சுமைகளை ஏற்றும் போதும், அழகாக முழங்கால்படியிட்டு தன்னைத் தாழ்த்தி ஒப்புக் கொடுக்கிறது. அது தண்ணீர் குடிக்கும் போதும் முழங்கால்படியிட்டு குனிந்து குடிக்கிறது. இந்த ஒட்டகங்கள் மூலமாக நீங்கள் கற்றுக்கொள்ளக் கூடிய அருமையான பாடம் முழங்கால்படியிடுவதே.
நீங்கள் எஜமானாகிய கர்த்தருக்கு முன்பாக எப்பொழுதும் முழங்காலிலே நிற்கக்கற்றுக்கொள்ளவேண்டும். முழங்காலிடுவது என்பது உங்களைத் தாழ்த்துவதற்கு ஒரு அடையாளம் ஆகும். உங்களைத் தாழ்த்தி தேவசமுகத்திலே கண்ணீரோடு ஜெபிக்கும் போது, கர்த்தர் ஆம் என்றும் ஆமென் என்றும் பதிலளிப்பார்.
ஒரு மாப்பிள்ளைவீட்டார் ஒரு பெண்ணைக் குறித்து கேள்விப்பட்டு அவளைப் பார்க்கப்போனார்கள். அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளைவீட்டார் வருவது தெரியாது. அவள் தன்னுடைய வழக்கத்தின்படியே அறைக்கதவை பூட்டி முழங்காலிலே நின்று ஜெபித்துக்கொண்டிருந்தாள். மாப்பிள்ளைவீட்டார் அவளைப் பார்க்கத் துரிதப்படுத்தின போது, “அவள் தினந்தோறும் ஒரு மணி நேரம் முழங்காலிலே நின்று ஜெபிப்பாள். நாங்கள் அவளை தொந்தரவு செய்வதில்லை. அவள் ஜெபித்து முடித்து வெளியே வரும் வரைக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று அவளது பெற்றோர் தெரிவித்தனர்.
அவள் ஜெபித்து முடித்து வெளியே வந்தபோது அவளுடைய முகமெல்லாம் தெய்வீகபிரசன்னத்தினால் நிரம்பியிருந்தது. கர்த்தருடைய ஆவியானவர் மாப்பிள்ளைவீட்டாருடைய உள்ளத்திலே, ‘குணசாலியான ஸ்திரீயை கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலைமுத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது’ என்று அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து பேசினார். அவளைத் தங்களுடைய குடும்பத்துக்கு ஏற்ற மருமகளாக அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிந்து கொண்டார்கள்.
ஒட்டகத்தை நினைக்கும் போதெல்லாம் அது முழங்கால் ஜெப ஊழியத்தையே காண்பிக்கிறது. எல்லா ஊழியங்களிலும் சிறந்த ஊழியம் முழங்காலிலே நின்று ஜெபிக்கிற ஊழியமே. பெற்றோர் முழங்காலிலே நின்று ஜெபிக்கும் போது பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். ஊழியர்கள் முழங்காலிலே நின்று ஜெபிக்கும் போது, விசுவாசிகள் கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்கிறார்கள்.தேவபிள்ளைகளே, ஜெபிக்கும் போதெல்லாம் முழங்காலிலே நின்று ஜெபிப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்காற்படியிட்டு…. அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்” (எபே. 3:15,19).