AppamAppam - Tamil

ஜனவரி 29 – பொறுமையில் பூரணம்!

“நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:4).

பொறுமையில் பூரணராயிருந்தால், நீங்கள் ஒன்றிலும் குறைவில்லாதவர்களாகவும், நிறைவுள்ளவர்களாகவும் விளங்குவீர்கள். இது கர்த்தரின் வாக்குத்தத்தம். ஒரு சிறுவன் பட்டுப் புழு ஒன்றை வளர்த்து வந்தான். சில நாட்களுக்குப் பின் அது பட்டுப்பூச்சியாக மாறி, கூட்டிலிருந்து வெளியேவர முயற்சி செய்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதல்ல. பல மணி நேரங்கள் பொறுமையோடே போராடித்தான் வெளிவர வேண்டும்.

அந்தப் பட்டுப்பூச்சிக்குப் பொறுமை இருந்தது. ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. அவன் கூரிய பிளேடு ஒன்றால் மெதுவாக அந்தக் கூட்டை வெட்டி பட்டுப்பூச்சியை சுலபமாக வெளியே எடுத்து விட்டான். ஆனால் அந்த பட்டுப் பூச்சியால் பறக்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாயிருந்தபடியால் கீழே விழுந்து விட்டது. முடிவில் எறும்புகள் அதை இழுத்துச் சென்றன.

அந்தச் சிறுவனின் தகப்பனார், “மகனே, கூட்டிலிருந்து வெளிவர அந்தப் பட்டுப்பூச்சி பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதன் தசை நார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளிவரப் பாடுபடுவதால் அதன் சரீரம் வற்றி, பளு குறைந்து பறந்து செல்ல உறுதியுள்ளதாக மாறும். கர்த்தர் பொறுமையினால்தான் அதைப் பரிபூரணப்படுத்துகிறார்” என்று சொன்னார்.

பொறுமையானது உங்களில் பூரணமாய் கிரியை செய்யக்கடவது. அது உன்னதங்களில் கிறிஸ்துவோடுகூட உலாவ உங்களுக்கு உதவி செய்யும். ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற பொறுமை மிகவும் அவசியம். ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமை (கலா. 5:22) ஆகும். கர்த்தர் நீடிய பொறுமையாகிய கனியை உங்களிடத்தில் எதிர்பார்க்கிறார். நீடிய பொறுமை உங்களில் நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.

பெத்தானியா என்ற ஒரு கிராமத்தில் இயேசுவுக்குப் பிரியமான ஒரு குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்திலுள்ள லாசரு மிகவும் வியாதிப்பட்டான். அவனது சகோதரிகள், “ஆண்டவரே நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்” என்று சொல்லியனுப்பினார்கள். மட்டுமல்ல, அவர் விரைந்து வருவார், வியாதியைக் குணமாக்குவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். வியாதி அதிகப்பட்டது, கடுமையானது, உயிர்ப் போராட்டம் நடந்தது. இறுதியில், லாசரு மரித்துப்போனான். அடக்க ஆராதனையிலாவது கலந்துகொண்டு ஆறுதல் மொழி பேசுவார் என்று எண்ணினர். ஆனால் இயேசுவோ வரவில்லை.

இயேசு நான்கு நாட்களுக்குப் பின் பொறுமையாய் வந்தார். வந்தவுடன், லாசருவை உயிரோடு எழுப்பிக் கொடுத்தார். அந்தப் பொறுமை தேவ நாமம் மகிமைப்பட ஏதுவாயிற்று. கிறிஸ்துவும் மகிமைப்பட்டார். தேவபிள்ளைகளே, பாடுகள் மற்றும் உபத்திரவங்கள் ஆகியவற்றின் மத்தியில் பொறுமையாகவேயிருங்கள். தாமதமானாலும் பொறுமையாயிருங்கள். கர்த்தர் அற்புதத்தை நிச்சயமாகவே செய்வார். விசுவாசத்துடன் காத்திருங்கள்.

நினைவிற்கு:- “…நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள்” (எபே. 4:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.