AppamAppam - Tamil

ஜனவரி 24 – பூரண சுவிசேஷம்!

“இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்” (ரோமர் 15:19).

பூரண சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன் என்பதே, அப். பவுலின் சாட்சி. “எருசலேம் துவக்கி இல்லிரிக்கம் வரைக்கும்” என்று தன் எல்லையை விவரித்துச் சொல்லுகிறார். சற்று சிந்தித்துப்பாருங்கள். நவீன காலத்திலிருப்பதுபோல எந்த விரைவான போக்குவரத்து வசதிகளும் அந்த நாட்களில் இல்லை. வேகமாக பறக்கும் விமானமோ, ரயில் வண்டிகளோ, பஸ்களோ இல்லை. வானொலியில் ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் வாய்ப்பும் இல்லை. பத்திரிக்கை, புத்தகம் போன்றவை இன்று இலட்சக்கணக்கில் அச்சடித்து வெளியிடுவதைப்போல அன்று வெளியிட அச்சகங்கள் இல்லை.

ஆனால் பூரண தியாகம், பூரண அர்ப்பணிப்பு, பூரண உழைப்பு ஆகியவை இருந்தன. கர்த்தர் இன்று உங்களுக்கு எவ்வளவு அதிகமான வசதிகளையும், வாய்ப்புகளையும் தந்திருக்கிறார்! உலகத்தின் முடிவு ஏற்படப் போகிற கடைசி தருணத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

கர்த்தர் உங்களுக்குக் கிருபையாய் கொடுத்த ஒவ்வொரு வினாடி நேரத்தையும் நீங்கள் துரிதமாய்ப் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமல்லவா? இயேசு சொன்னார், “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற்கு 16:15). அந்த உத்தரவை நிறைவேற்றுகிறீர்களா? பூரண சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்து, பூரணத்திற்குள்ளாக மக்களை வழிநடத்துகிறீர்களா?

பூரண சுவிசேஷத்தினால் ஜனங்களுக்குப் பூரண ஆசீர்வாதம் உண்டு. அரை குறையாக சுவிசேஷத்தை அறிவித்து சத்தியத்தை மறைக்கும்போது, ஜனங்கள் ஆசீர்வாதத்தை இழந்துபோவார்கள். கர்த்தருக்கும் நீங்கள் கணக்குக் கொடுக்க வேண்டியதிருக்கும். அப். பவுல் எவ்வளவு நிச்சயத்தோடும், எவ்வளவு உறுதியோடும் எழுதுகிறார் பாருங்கள். “கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேன்” (ரோமர் 15:29). ஆம் கிறிஸ்துவின் பூரணத்தினால் நிரப்பப்பட்டவர்கள் சம்பூரண ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறார்கள்.

சிலர் வாதிடும்போது, ‘கர்த்தர் எந்த ஒரு மனுஷனுக்கும் சம்பூரணமான ஆசீர்வாதங்களைக் கொடுப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பகிர்ந்தளிக்கிறார்’ என்கிறார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட வசனம் அதை ஒப்புக்கொள்கிறதில்லை. கிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதமும், பரிசுத்தாவியானவரால் கிடைக்கும் ஒவ்வொரு ஆவியின் வரமும் கனியும் கிருபையும் நமக்குரியது.

ஒவ்வொரு விசுவாசியும் ஆவியின் வரங்கள் அத்தனையையும் பெற்றுக்கொள்ள முடியும் (1 கொரி. 12:4-31). ஒவ்வொரு ஆவியின் கனியையும் (கலா. 5:23) உங்கள் வாழ்க்கையில் கொடுக்க முடியும். கிறிஸ்துவின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் சம்பூரணமாகப் பெற்றுக்கொள்ள முடியும் (ரோமர் 15:29).

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் பரிபூரண ஆசீர்வாதங்களாலும், பரிபூரண ஆவியின் வரங்களாலும் நீங்கள் நிரப்பப்படுவீர்களாக!

நினைவிற்கு:- “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.