No products in the cart.
ஜனவரி 20 – பூரண சற்குணர்!
“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத். 5:48).
தேவனுடைய சுபாவத்தையும் குணாதிசயத்தையும் பின்பற்றி அவரைப் போலவே நீங்களும் பூரணம் அடைய வேண்டும் என்பதே தேவனுடைய நோக்கமும் சித்தமுமாயிருக்கிறது. எனவேதான், ‘நான் பரிசுத்தர், ஆகையால், நீங்களும் பரிசுத்தராய் இருப்பீர்களாக’ (லேவி. 11:45) என்றும், ‘உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்’ (லூக். 6:36) என்றும், ‘அவர் உண்மையுள்ளவர் நீங்களும் உண்மையுள்ளவர்களாய் இருங்கள்’ (1 கொரி. 1:9; சங். 51:6) என்றும் கட்டளையிடுகிறார். மேலும், அவர் பூரண சற்குணராய் இருக்கிறதுபோல நீங்களும் பூரண சற்குணராய் இருக்க வேண்டுமென்றும் கர்த்தர் கூறுகிறார். பூரண சற்குணராய் இருப்பதென்பது உங்களால் முடிந்த ஒன்றே. முடியாத ஒன்றை நீங்கள் செய்யும்படி கர்த்தர் உங்களை ஒருபோதும் கட்டாயப்படுத்துவதோ, வற்புறுத்துவதோ இல்லை.
உதாரணமாக உங்களுக்கு சிறிய வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் மிஞ்சிப்போனால் மூன்று இட்லி சாப்பிடக்கூடும். அவனைக் கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி, முப்பது இட்லி சாப்பிடுமாறு நீங்கள் வற்புறுத்துவீர்களா? பொல்லாத தகப்பன்கூட அப்படிச் செய்யவேமாட்டான். அதைப்போலவே, உங்களால் நிறைவேற்ற முடியாத கட்டளையை ஒருபோதும் அன்புள்ள தேவன் கொடுக்கிறதே இல்லை. ஆகவே பூரணராக வாழ நிச்சயமாகவே உங்களால் முடியும் என்று ஆணித்தரமாக விசுவாசியுங்கள்.
உங்களைத் தன்னுடைய சாயலிலே பூரணராக்க வேண்டும் என்பதிலே கர்த்தரும் அக்கறையுள்ளவராயிருக்கிறார். ஏதேனில், மண்ணை தன்னுடைய கைகளில் எடுத்து, கர்த்தர் அந்த மண்ணுக்கு தன்னுடைய பூரண சாயலைக் கொடுக்கும்படிப் பிரியப்பட்டார். ஆகவேதான் மனுஷனில் தன்னுடைய சாயலையும், ரூபத்தையும் கொண்டு வந்தார். ஜீவசுவாசத்தை அவனுடைய நாசியில் ஊதி ஜீவாத்துமாவாக்கினார்.
ஒரு தச்சனிடம் நீங்கள் சில மரப்பலகைகளைக் கொடுத்து ஒரு மேஜையை செய்யும்படி சொல்லுவீர்களேயானால், அவன் அவற்றைக்கொண்டு தன்னுடைய கற்பனையில் ஒரு அழகான மேஜையைச் செய்கிறான். பிறகு அப்படியே அழகான மேஜையை உருவாக்கியும் விடுகிறான். தச்சனுடைய மனதிற்குள் இருந்த மேஜையாகிய பூரணம், அவன் கைவண்ணமாக திறமையினால் நிறைவேறுகிறது. அப்படித்தான் அக்கிரமத்திலும், பாவத்திலும் மரித்து மண்ணாகக் கிடந்த உங்களைக் கர்த்தர் பூரணராக்கச் சித்தமானார். அவருடைய விசுவாசக் கண்கள் உங்களை அவருடைய சாயலில் பூரணராகவே கண்டது.
ஆகவே அவர் தம்முடைய இரத்தத்தினாலும், வேத வசனத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் உங்களைப் பூரணத்திற்கு நேராக வழிநடத்த சித்தமானார். தேவபிள்ளைகளே, இன்று உங்களுக்கு இருக்கிற போராட்டங்கள், பெலவீனங்கள், தோல்விகள் எல்லாம் விரைவில் மாறிப்போகும். கர்த்தர் உங்களைத் தோல்வியின் சின்னமாக அல்ல, மகிமையின் ஜெயமாய்க் காண்கிறார். ஆகவே நீங்கள் பரிசுத்தவான்களாக, பூரண சற்குணர்களாக முன்னேறுவீர்களாக!
நினைவிற்கு:- “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும் ஏற்படுத்தினார்” (எபே. 4:11).