No products in the cart.
ஜனவரி 19 – பூரணத்தை நோக்கி!
“…பூரணராகும்படி கடந்து போவோமாக” (எபி. 6:2).
கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாகிவிட்ட இந்த நாட்களில், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியம் உண்டென்றால் அது பூரணராகும்படி கடந்து செல்லுவதுதான். பூரணராகுதல் என்றால், கிறிஸ்துவின் சகல குணாதிசயங்களையும் முற்றிலும் சுதந்தரித்துக்கொள்ளுவதேயாகும்.
‘பூரணராகுதல்’ என்று சொல்லும்போது அது ஏதோ ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ கிடைக்கக்கூடியது அல்ல. அது உங்களுடைய முயற்சியினாலும், தேவனுடைய கிருபையினாலும், உங்களுக்குக் கிடைக்கிற ஒரு தெய்வீக அனுபவம். ஒவ்வொரு நாளும் பூரணத்தை நோக்கி நீங்கள் முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் இம்மைக்காகவே வாழுகிறார்களே தவிர கர்த்தருடைய வருகையிலே பூரணராய்க் காணப்பட வேண்டுமே என்ற பாரத்துடன் வாழுவதில்லை. அநேகருடைய வாழ்க்கை முழுவதும் வயிற்றுக்கும் வாய்க்கும் உள்ள போராட்டமாகவே கடந்து சென்று விடுகிறது. அப். பவுல், “நாம் பூரணராகும்படி கடந்து போவோமாக” என்கிறார். தனது வாழ்க்கையின் குறிக்கோளாக “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படி” அவர் தீர்மானித்திருந்தார்.
நீங்கள் இயேசுவின் கரம்பிடித்து அனுதினமும் முன்னேறிச் செல்லும்போது, ஆழமான ஆவிக்குரிய உன்னதத்திற்குரிய அனுபவங்களைக் காண்பதுடன் வெளிப்பாடுகளையும் பெற்றுக்கொள்ளுவீர்கள். அத்துடன் நீங்கள் கிறிஸ்துவின் பரிசுத்தத்திலே, தெய்வீக அன்பிலே, விசுவாசத்திலே, கிறிஸ்துவின் சுபாவங்களிலே பூரணராக வேண்டும். பூரணத்தை நோக்கி முன்னேறுகிற உங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கை உண்டு. வேதம் சொல்லுகிறது, “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:2).
மனுஷன் தெய்வத்தின் பரிபூரணத்திற்குள் வர முடியுமா? அன்பிலே பூரணம்; விசுவாசத்திலே பூரணம்; சாந்தத்தில் பூரணம்; சகல நற்கிரியைகளிலும் பூரணம்; இவையெல்லாம் அடையக்கூடிய காரியங்கள்தானா? இக்கேள்விகளை ஒரு தேவ மனிதனின் முன்வைத்தபோது அவர் இப்படி பதிலளித்தார். “தனித்தனியே ஒவ்வொரு குணாதிசயத்திலும் பூரணத்தை அடைய முயற்சித்துக் கொண்டிருப்பது நடக்காத காரியம். அந்த நினைவை விட்டு விட்டு என் கிறிஸ்துவே பூரணர், அவரை அடைய நான் முயற்சிக்கிறேன் என்று முன்னேறிச் செல்லுங்கள். வேதத்தைத் திரும்பத் திரும்ப வாசித்து கிறிஸ்துவின் சுபாவங்களைத் தரித்துக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பூரணத்தை நோக்கி கடந்து செல்லுவீர்கள். பூரண சற்குணரான கிறிஸ்துவை சுதந்தரித்துக் கொள்ளுவீர்கள்”.
தேவபிள்ளைகளே, கிறிஸ்துவையும், அதிகமாக அவரது வார்த்தைகளையும் தியானம் செய்யுங்கள். கிறிஸ்துவோடுகூட சஞ்சரியுங்கள். அப்போது உங்களை அறியாமலேயே கிறிஸ்துவின் சாயலிலே நீங்கள் பூரணராகி, பூரணப்பட நடப்பீர்கள்.
நினைவிற்கு:- “இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3).