AppamAppam - Tamil

ஜனவரி 18 – புதிதாக்கும் வல்லமை!

“எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரி. 4:16).

‘புதிதாக்கும் ஆண்டவரே’ என்று நீங்கள் ஜெபிக்கும்போது, கர்த்தர் உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய அனைத்தையும் முற்றிலும் புதிதாக்குகிறார். புதிய வல்லமையையும், புதிய கிருபைகளையும் உங்களுக்குத் தந்தருளுகிறார். உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது என்று வேதம் சொல்லுகிறது.

உள்ளான மனுஷனைப் புதிதாக்கும்படி ஆண்டவர் இரண்டு காரியங்களை வைத்திருக்கிறார். ஒன்று, மறுஜென்ம முழுக்கு. மற்றது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம். அப். பவுல், “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5) என்று குறிப்பிடுகிறார்.

நீங்கள் இயேசுவுக்குள்ளே வரும்போது பழைய ஜீவியத்திற்கும், பழைய பாவ வாழ்க்கைக்கும் ஒரு முழுக்கு போடுகிறீர்கள். மட்டுமல்ல, கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்கு அடையாளமான தண்ணீரின் முழுக்கினாலே உங்களைச் சுத்திகரிக்கிறீர்கள். அதே வேளையிலே கர்த்தரும் உங்களைப் பரிசுத்த ஆவியினாலே நிரப்புகிறார்.

நாளுக்கு நாள் புதிதாக்கப்படும் வல்லமையோடு நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாக இருக்கிறது. அதற்காகவே கர்த்தர் தம்முடைய ஆவியை உங்கள்மேல் ஊற்றுகிறார். நீங்கள் அந்த பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, கர்த்தரோடு இணைந்துகொள்ளுகிறீர்கள். மறுரூபமாக்கப்படுகிறீர்கள். வேதம் சொல்லுகிறது: “அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்” (1 கொரி. 6:17).

ஜான் வெஸ்லி என்ற கர்த்தருடைய ஊழியக்காரரைக் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு நாள், ஒரு பேட்டியின்போது ‘ஐயா, போதகரே, கிறிஸ்தவ கோவில்கள் எல்லாம் வெறுமையாய் காட்சியளிக்கும் இந்த நாட்களில் உங்களுடைய பிரசங்கத்தை கேட்பதற்காக திரளான ஜனங்கள் கூடி வருகிறார்களே, அதன் இரகசியம் என்ன’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு அவர், “ஐயா, நான் என்னைப் புதிதாக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறேன். அந்த வல்லமை என்னிலே எப்படிப் பற்றியெரிகிறது என்று பார்ப்பதற்காகவே ஜனங்கள் திரண்டு வருகிறார்கள்” என்று பதிலளித்தார்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய உள்ளான மனிதனிலே நீங்கள் வல்லமையாக பலப்பட வேண்டும் என்றும், உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறீர்களா? பரிசுத்த ஆவியின் அக்கினி உங்களிலே இறங்க இடங்கொடுங்கள். அப்பொழுது, அவர் நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கையைப் புதுப்பித்து, உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்.

நினைவிற்கு:- “உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது; அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்” (யோவான் 14:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.