No products in the cart.
ஜனவரி 17 – புதுமை!
“அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்” (சங். 71:7).
ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, தேவனுடைய மகிமையான ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறான். ஆனால் பலவேளைகளில் சமுதாயத்தினரால், “இவன் ஏன் புது மார்க்கத்திற்குள் சென்று விட்டான்? இவன் ஏன் பழைய தெய்வங்களை மறந்துவிட்டான்? இவன் ஏன் நம்முடைய மார்க்க சடங்காச்சாரங்களிலும் விக்கிரக ஆராதனைகளிலும் கலந்து கொள்ளவில்லை?” என்று சொல்லி ஏளனமும் பரியாசமும் செய்யப்படுகிறார்கள். சில வேளைகளில் சொந்த குடும்பத்தினராலேயே துன்பப்படுத்தப்படுகிறார்கள்.
நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ் என்ற ஒரு பெரிய விஞ்ஞானி “பூமி தட்டையானது அல்ல; அது உருண்டை வடிவமானது. சூரியன் பூமியை சுற்றுவதில்லை. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளுகிறது” என்ற உண்மையைக் கண்டுபிடித்து வெளியிட்டார். ஆனால் அன்றைய மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது அவர்களுடைய மதவாதத்திற்கு ஒவ்வாததாய் இருந்தபடியினாலே, அவர் கண்டுபிடித்த உண்மையின் நிமித்தம் அவரைக் கொளுத்தி கொன்றார்கள். எத்தனை பரிதாபம்!
நீங்கள் சத்தியத்தை அறிந்து ஏற்றுக்கொள்ளும்போது அது அநேகருக்கு இடறுதலாக அமைந்துவிடுகிறது. தாவீது ராஜா சொல்லுகிறார் அநேகருக்கு நான் புதுமையைப் போலானேன் (சங். 71:7). ஆதித்திருச்சபை மக்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டபோது, பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் ஆகியோர் தங்களுடைய மார்க்க வைராக்கியத்தின்படியே அவர்களை எதிர்த்தார்கள். நகரத்திற்கு புறம்பாக்கினார்கள். வாரினால் அடித்துத் துன்புறுத்தினார்கள்.
இன்றைக்கும்கூட இப்படிப்பட்ட பாடுகள், பல கிராமங்களிலே நடக்கிறதைக் காணலாம். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது பல கடினமானக் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார்கள். ஊர் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது. வயல்வெளிகளில் வேலை செய்யக்கூடாது என்று சொல்லி அவர்களை வாழவிடாதபடி தடுக்கிறார்கள். அரசாங்க சலுகைகள்கூட நிறுத்தப்படுகின்றன.
இயேசு சொன்னார், “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” (மத். 5:11, 12).
வேதத்திலே, புது சிருஷ்டியின் மேன்மையை உணர்ந்த தேவபிள்ளைகள் எந்த சித்திரவதைகளுக்கும் பாடுகளுக்கும் பயப்படவில்லை. அவர்கள் புது சிருஷ்டியாய் இருந்ததினாலே உலகத்தோடு ஒத்துப் போகவில்லை. சத்தியத்தை சத்தியமாக அறிவித்து அதற்காக தங்களுடைய ஜீவனையும் அர்ப்பணிக்க ஆயத்தமாயிருந்தார்கள்.
தேவபிள்ளைகளே, இன்று நீங்களும் இப்படிப்பட்ட உபத்திரவத்தின் மத்தியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? கவலைப்படாதேயுங்கள். கர்த்தர் உங்களுக்கு பலத்த அடைக்கலமாயிருக்கிறார்.
நினைவிற்கு:- “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” (ரோமர் 8:18).