AppamAppam - Tamil

ஜனவரி 16 – புதிய வானம், புதிய பூமி!

“நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா. 66:22).

கிறிஸ்துவுக்குள்ளாக புதுசிருஷ்டியாக இருக்கிற மனுஷனுக்காக புதிய வானமும் புதிய பூமியும் காத்திருக்கின்றன. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்காக கர்த்தர் புதிய வானத்தையும், புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறார்.

இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு சீஷர்களைப் பார்த்து, “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; எனினும் உங்களுக்காக ஒரு புதிய வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போகிறேன்” என்று சொன்னார். இன்று வரையிலும் அவர் அந்த வாசஸ்தலங்களை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

ஆறு நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த பூமியே இவ்வளவு அழகாக கடல்களும், மலைகளும், பள்ளத்தாக்குகளும், பழ வர்க்கங்களும் நிறைந்ததாயிருக்கும் என்றால், கிறிஸ்து தம்முடைய புதிய சிருஷ்டிப்பாக உங்களுக்காக உருவாக்குகிற அந்த புதிய வாசஸ்தலம் எவ்வளவு அழகானதாக, வசீகரமானதாக, நித்திய பேரின்பம் உள்ளதாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!

ஆண்டவர் இந்த பூமியை சிருஷ்டித்தபோது, சாத்தான் சர்ப்பத்தின் வழியாக ஏதேனுக்குள் பிரவேசித்து, ஏவாளை வஞ்சித்தான். ஆனால் சாத்தானால் ஒருபோதும் புதிய பூமியிலும், புதிய வானத்திலும் பிரவேசிக்க முடியாது. ஏனெனில் கர்த்தர் அவனை என்றென்றுமாய் பாதாளத்திலே கட்டிப் போடுவார். புதிய வானமும் பூமியும் உங்களுக்கே உரியது (வெளி. 21:27).

அன்றைக்கு நோவா பேழைக்குள் ஏறினார். பல நாட்கள் மழை விடாமல் பெய்தது. பேழை அரராத் மலையில் தங்கிற்று. பேழையிலிருந்து அவர் இறங்கியபோது பழைய உலகம் அழிந்துபோனதைக் கண்டார். பழைய மனிதர்கள் ஒருவரையும் காணோம். புதிய உலகத்தில் அவர் இறங்கினார். புதிய சந்ததியை உருவாக்கினார்.

வண்ணத்துப்பூச்சி தன்னுடைய முட்டைகளை இலையிலே இடுகிறது. அந்த முட்டையிலிருந்து ஒரு புழு வெளிவந்து இலைகளை மேய்ந்து வாழுகிறது. பின்பு, அந்தப் புழு கூட்டுப்புழுவாகி அப்படியே அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் உரிய நேரத்தில் அது ஒரு அழகான வண்ணத்துப் பூச்சியாக உருமாறி, சிறகடித்துப் புதிய உலகத்திற்குள் பறந்து செல்லுகிறது. பழைய உலகம் அதற்கு வெறும் இலைதான். புது உலகமோ அழகான பூங்காக்கள்.

தேவபிள்ளைகளே, நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கும்போது, இமைப் பொழுதில் மறுரூபமாக்கப்பட்டு, கிறிஸ்துவின் சாயலை அணிந்து, அந்த ஒளிமயமான தேசத்திற்குள் பிரவேசிப்பீர்கள். அங்கு பாவமில்லை, சாபமில்லை, வியாதியில்லை, கடும் பசியுமில்லை. அது இராக்காலம் இல்லாத, கண்ணீர் இல்லாத தேசம்.

நினைவிற்கு:- “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று” (வெளி. 21:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.