No products in the cart.
ஜனவரி 14 – புதிய மனம்!
“உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2).
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். அந்தப் புது சிருஷ்டியினுடைய மனம் புதிதாக வேண்டும். புதிதாகுதலினாலே மறுரூபமாகவும் வேண்டும். அப். பவுல், “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்று குறிப்பிடுகிறார்.
இரட்சிப்பு என்பது உங்களுக்கு ஒரே நாளில் ஏற்பட்டுவிடலாம். ஆனால் உங்களுடைய மனம் புதிதாகி மறுரூபமாக வேண்டுமென்றால், நீங்கள் வேத வசனத்தை அதிகமாக வாசிப்பதும், தேவனுடைய பிள்ளைகளோடு அதிகமான ஐக்கியம் கொள்ளுவதும் அவசியம். ஆழமான ஜெபஜீவியத்திற்குள் செல்லச்செல்லதான், உங்களுடைய மனம் புதிதாக்கப்படுகிறது.
முதலாவது, அப். பவுல், “மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்று யாருக்கு எழுதினார்? பாவிகளுக்கு எழுதாமல், இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்கும், அபிஷேகம் பண்ணப்பட்ட பரிசுத்தவான்களுக்கும் எழுதினார். இரட்சிப்போடும் அபிஷேகத்தோடும் நீங்கள் நின்றுவிடக்கூடாது. ஒவ்வொருநாளும், உங்களுடைய மனம் மறுரூபமாக வேண்டும்.
இரண்டாவது, நீங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் என்று ஆண்டவர் சொல்லுவதைக் கவனியுங்கள். நான் உங்கள் மனதை மறுரூபமாக்குவேன் என்று ஆண்டவர் சொல்லவில்லை. உங்களை இரத்தத்தினால் கழுவி புது சிருஷ்டியாக்கிவிட்டார். புதிய இருதயத்தையும், புதிய ஆவியையும் தந்துவிட்டார். புது வல்லமையையும், புது பெலனையும் அருளிச் செய்தார். காலைதோறும் புதிய கிருபைகளைத் தந்திருக்கிறார். ஆனால் மனதை மறுரூபமாக்குவது உங்களுடைய கைகளில்தான் இருக்கிறது.
நீங்கள் புதிதாக்கப்படுவது எப்படி? யாக்கோபு எழுதுகிறார். “நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்” (யாக். 1:21). வசனத்தைக் கொண்டு தான் உங்களுடைய மனதைப் புதிதாக்க வேண்டும். வசனத்தை சாந்தத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். வசனத்தின்படியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். வசனத்தை விசுவாசத்துடன் அறிக்கை செய்ய வேண்டும்.
வேதவசனத்தில்தான் ஆவியும், ஜீவனும் இருக்கின்றன. வேத வசனங்கள்தான் ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்றன. தேவபிள்ளைகளே, வேத வசனங்களின் மூலமாகத் தான் சாத்தானுடைய கிரியைகளை நீங்கள் அழித்துப்போட முடியும். கர்த்தருடைய வார்த்தையினால் உங்களுடைய மனதை நிரப்பிக்கொள்ளுவதுடன் தொடர்ந்து அதையே தியானிப்பீர்களேயானால், சத்துருவின் சோதனைகள் ஒருநாளும் உங்களை மேற்கொள்ளவேமாட்டாது.
நினைவிற்கு:- “நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்” (1 பேதுரு 1:13).