AppamAppam - Tamil

ஜனவரி 11 – புதிய ஓட்டம்!

“ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:13, 14).

கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் புதுச்சிருஷ்டியாகும்போது நீங்கள் ஓடுவதற்கென ஒரு புதிய ஓட்டத்தையும், அதற்கான புதியதொரு பாதையையும் பெறுகிறீர்கள். அந்தப் பாதைக்கு ஒரு புதிய இலக்கும் இருக்கிறது. ஆகவே நீங்கள் பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி அந்தப் புதிய பாதையில் ஓட வேண்டும்.

உலகத்தார் அழிவுள்ள கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக ஓடுவார்கள். பிரசித்தி பெற்ற கிரேக்க ஓட்டப்பந்தயத்திலே, அழகான பூக்களினாலும் தழைகளினாலும் அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தை முதலாவதாக வந்து வெற்றி பெறுகிறவர்களின் தலையிலே சூட்டி ஆரவாரித்துப் பாராட்டுவார்கள். ஆனால் நீங்களோ, அழிவில்லாத கிரீடத்தை பெறும்படி ஓடுகிறீர்கள். உங்களுடைய ஓட்டத்தின் முடிவிலே நீதியின் கிரீடத்தை, வாடாத மகிமையின் கிரீடத்தை கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுவார்.

நமக்கு முன்பாக, அநேக பரிசுத்தவான்கள், தேவன் அவர்களுக்கு நியமித்த ஓட்டத்திலே ஓடினார்கள். தங்களுடைய ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்த பரிசுத்தவான்கள் இன்றைக்கும்கூட மேகம்போல திரளான சாட்சிகளாய்நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள். நீங்கள் எப்படி ஓடவேண்டும்? இந்தப் புதிய ஓட்டத்தில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒரு பகுதி பின்னானவைகளை மறக்க வேண்டும். மறுபகுதி முன்னானவைகளை நாடவேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய ஓட்டம் வெற்றியில் முடியும்.

அன்றைக்கு லோத்தின் குடும்பம், சோதோமின் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி மலையை நோக்கி ஓடியது. ஆனால் லோத்தின் மனைவியோ பின்னானவைகளை மறக்கவில்லை. ஆகவே அவள் பின்னிட்டுத் திரும்பிப் பார்த்ததின்பேரில் உப்புத்தூணாய் மாறிவிட்டாள் (ஆதி. 19:26). வேதம் சொல்லுகிறது, “குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக் கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்” (சங். 45:10, 11). கிறிஸ்து உங்களில் பிரியப்படவேண்டுமென்றால், உங்கள் ஆதித்தகப்பனாகிய ஆதாமின் வாழ்க்கையை மறந்துவிடுங்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கிப் பிரயாணம் செய்தார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளமோ பின்னானவைகளை மறக்காமல் எகிப்திலுள்ள கொம்மட்டி காய்கள், பூண்டுகள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றையே இச்சித்துக் கொண்டிருந்தது. முன்னானவைகளை நாடாததினாலே அவர்களில் அநேகரால் கானானைச் சுதந்தரித்துக்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு முன்பாக பரலோக வீடு உண்டு, நித்திய பேரின்பம் உண்டு. இயேசுகிறிஸ்துவினுடைய முகத்தின் ஒளியினால் பிரகாசமாயிருக்கும் பரலோக ராஜ்யமுண்டு.

தேவபிள்ளைகளே, பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி, பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்ளும்படி ஓடுவீர்களாக!

நினைவிற்கு:- “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்” (1 கொரி. 9:24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.