AppamAppam - Tamil

ஜனவரி 06 – புதிய நாமம்!

“ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்” (ஏசா.62:2).

கர்த்தர் புதிய நாமத்தை உங்களுக்குத் தரிப்பிக்கிறார். அந்த நாமம் கர்த்தருடைய வாய் சொல்லும் புதிய நாமமாகும். அந்த நாமத்தினால் நீங்கள் அழைக்கப்படும் போது, கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பீர்கள் (ஏசா. 62:2,3). அநேகர் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு வந்தபிறகும், தங்களுக்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பழைய குலதெய்வங்கள் மற்றும் அந்நிய தெய்வங்களின் பெயர்களையே தங்கள் பெயராகத் தொடர அனுமதிக்கிறார்கள். சிலர் தங்களுடைய பெயரில் ஒரு பகுதி கிறிஸ்தவ பெயராகவும், மறு பகுதி புறஜாதி பெயராகவும் வைத்திருப்பார்கள். இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் வரும்போது, வேதாகமத்திலுள்ள ஆசீர்வாதமான பெயர்களில் ஒன்றையே உங்கள் பெயராகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

புறமதத்துப் பெயர்களை வைத்துக்கொண்டு சுவிசேஷத்தை அறிவிக்கும்போது, அது அதிகமான ஆத்துமாக்களைக் கவருவதாக சிலர் தவறாக வாதிக்கிறார்கள். “கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” (2 கொரி. 6:15). “பாகால் தெய்வமானால் பாகாலைப் பின்பற்றுங்கள். கர்த்தர் தெய்வமானால் கர்த்தரைப் பின்பற்றுங்கள்” என்று எலியா திட்டமாய்ச் சொன்னார். இரண்டுக்கும் இடையிலான ஒரு நிலையை நாம் எடுக்கக்கூடாது.

கர்த்தருடைய குடும்பத்திற்குள் வரும்போது புதிதாக வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். “என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்” (வெளி. 3:12) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அநேகர் தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளாததினாலே வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியாமலிருக்கிறார்கள். பழைய நிலையின் சாபங்கள் பின் தொடருகின்றன. ஒருநாளும் அதற்கு நீங்கள் இடம் கொடுத்துவிடக்கூடாது. நீங்கள் ஞானஸ்நானம் பெறும்போது, உங்கள் பழைய குடும்பத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு கர்த்தருடைய புது குடும்பத்திற்குள் வருகிறீர்கள் என்பதால்  வேதாகமக் குடும்பத்திலுள்ள ஆசீர்வாதமான பெயர்களையேத் தரித்துக் கொள்ள வேண்டும்.

தேவபிள்ளைகளே, நீங்கள் புதுசிருஷ்டியாய் மாறும்போது, சில வேளைகளிலே துன்பங்களையும் பாடுகளையும் அனுபவிக்க வேண்டியதாயிருக்கும். ஆனால் கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காக அவற்றை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளும்போது, இக்காலத்துப் பாடுகள் இனி நம்மில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பானவைகள் அல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுவீர்கள். கர்த்தர் உங்களைப் புதிதாக்கி, புதிய நாமத்தைத் தரித்திருக்கிறாரே. அந்த புதிய நாமத்தினால் நீங்கள் அழைக்கப்படும்போது, அது உங்களுக்கு மேன்மையாயிருக்கும்.

நினைவிற்கு:- “இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்” (ஏசா. 41:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.