No products in the cart.
ஜனவரி 05 – புதிய ஆவி!
“அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்” (எசேக். 11:19).
கிறிஸ்தவ வாழ்க்கை படிப்படியாக முன்னேறுகிற ஒரு வாழ்க்கை. புது அனுபவங்களைச் சுதந்தரித்துக் கொள்ளுகிற ஒரு வாழ்க்கை. வேதம் சொல்லுகிறது, “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன்” (எசேக். 36:26). ஆம், உங்களுடைய இருதயம் வெறுமையாய் இருக்கக்கூடாது. கர்த்தர் தருகிற புதிய அபிஷேகத்தைப் பெற்று, பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டதாய்இருக்க வேண்டும்.
ஒரு கண்ணாடிக் குடுவை முழுவதிலும் விஷம் நிறைந்த வாயு நிரம்பியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை எவ்வளவுதான் கவிழ்த்து பிடித்தாலும் அதனுள் இருக்கிற விஷ வாயு அதனுள் இருந்துகொண்டேதான் இருக்கும். இதை வெளியேற்ற வேண்டுமானால் முதலில் அந்த குடுவையைத் தண்ணீரினால் நிரப்ப வேண்டும். அது நிரம்ப நிரம்ப விஷவாயு வெளியேறிக்கொண்டேயிருக்கும். முழுவதும் நிரப்பப்படும்போது, விஷவாயு முழுவதும் நீங்கிவிடும். அதுபோலவே, நீங்கள் தேவனுடைய புதிதான ஆவியினால் மேலும் மேலும் நிரப்பப்பட, உங்களுக்குள்ளிருக்கிற அசுத்தங்கள் முற்றிலும் உங்களைவிட்டு வெளியேறி எல்லாம் புதிதாய் மாறிவிடும்.
உங்களுடைய உள்ளத்தை நீங்கள் வெறுமையாய் வைத்திருந்தால் அது ஆபத்திலேதான் முடியும். இரட்சிக்கப்படும்போது சிலருடைய உள்ளத்தில் அதுவரை குடியிருந்த பலவகையான ஆவிகள் வெளியேறும். அநேகரிடமிருந்து குடிகார ஆவிகளும், புகைப்பிடிக்கிற ஆவிகளும், கோபத்தின் ஆவிகளும், எரிச்சலின் ஆவிகளும், கன நித்திரையின் ஆவிகளும் வெளிவரக்கூடும். இப்படிப்பட்ட அசுத்த ஆவிகள் வெளியேறிய உடனேயே அந்த உள்ளத்தை நீங்கள் கிறிஸ்துவின் பிரசன்னத்தினாலும், தேவ ஆவியினாலும் நிரப்பிவிட வேண்டும்.
இயேசு சொன்னார், “அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்” (மத். 12:43-45).
ஆகவேதான், ஒரு மனுஷனை இரட்சிப்பிற்குள்ளே வழிநடத்தின உடனே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள்ளும் நீங்கள் அந்த ஆத்துமாவை வழிநடத்திவிட வேண்டும். அவனுடைய இருதயத்தை தேவனுடைய ஆலயமாக்கி, ஆவியானவருடைய ஆளுகைக்கு ஒப்புக்கொடுத்துவிடவேண்டும். தேவபிள்ளைகளே, அபிஷேகம் பெற்ற நீங்கள் அதிலே திருப்தியடைந்து நின்றுவிடாமல், அந்த புதிய ஆவியின் உன்னத அனுபவத்தைப் பல ஆத்துமாக்கள் பெற்றுக்கொள்ள உழைக்க வேண்டும்.
நினைவிற்கு:- “நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்” (யோவேல் 2:28).