AppamAppam - Tamil

ஜனவரி 01 – புதிய ஆண்டு!

“வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது” (சங். 65:11).

அன்றன்றுள்ள அப்பம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களை ஸ்தோத்திரத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஒரு புதிய வருடத்தை காணச்செய்த தேவனை நன்றியோடு ஸ்தோத்திரிக்கிறேன். தேவ பிரசன்னத்தோடு இந்தப் புதிய வருடத்தை ஆரம்பித்திருக்கிற உங்களைக் கர்த்தர் விசேஷித்த ஆசீர்வாதங்களினாலும், கிருபைகளினாலும், நன்மைகளினாலும் நிரப்புவாராக.

நம் தேவன் வருஷத்தை நன்மையினால் முடி சூட்டுகிறவர். அவர் வருஷம் முழுவதற்குமான நன்மைகளையெல்லாம் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் தருவதற்கு அவர் மிகவும் ஆவலாய்இருக்கிறார்.

கர்த்தர் 2022-ம் ஆண்டை நன்மையினால் முடிசூட்டி உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார். கர்த்தர் இந்த வருஷத்தை நன்மையினால் முடிசூட்டியிருக்கிறதினாலே வருகின்ற நாட்களில் உங்கள் பாதையெல்லாம் நெய்யாய்ப் பொழியும். ஆசீர்வாதங்களுக்காக விசுவாசத்துடன் காத்திருங்கள்.

நெய் என்னும் பொருள் போஷாக்கும் வாசனையுமுள்ளதாகும். இது எண்ணெயாகவும் பயன்படுகிறது. நெய் என்னும் வார்த்தை மேலான ஆசீர்வாதங்களைச் சுட்டிக்காண்பித்துக்கொண்டே இருக்கிறது. விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களை உங்களுக்குப் பொழிந்தருளும்படி கர்த்தர் சித்தம் கொண்டிருக்கிறார். இது கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமான ஆண்டு.

உங்கள் பாதையெல்லாம் நெய்யாய்ப் பொழிய வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். வேதம் சொல்லுகிறது, “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:6). நீங்கள் உங்கள் வழிகளைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள்வீர்களென்றால், உங்கள் பாதைகள் செவ்வையாய் இருக்கும். ஆசீர்வாதமாய் இருக்கும். நெய்யாய்ப் பொழியும்.

தாவீது புத்தாண்டைக் கர்த்தருடைய கரத்தில் கொடுத்து சந்தோஷத்துடன் அவரைத் துதித்தார். அவர் புதிய வருஷத்தை நோக்கிப் பார்த்ததுடன், கர்த்தர் கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களையும் நோக்கிப்பார்த்தார். நீங்களும் அப்படியேச் செய்யுங்கள். ஜீவனுள்ள வருஷத்தை முடிசூட்டுகிறவர், உங்களையும் முடிசூட்டுவார். தம்முடைய நன்மையான கிரீடத்தை, இரக்கமாகிய கிரீடத்தை, கிருபையாகிய கிரீடத்தை உங்களுக்கு சூட்டுவார்.

தேவபிள்ளைகளே, இந்தப் புதிய ஆண்டிலே நீங்கள் பன்மடங்கு மேன்மையாய் உயருவீர்கள். சேனைகளின் கர்த்தர் வைராக்கியமுள்ளவராய் உங்களை உயர்த்துவார். அவர் உங்களுக்கு முன்செல்லுகிறபடியால், அவருடைய பாதையிலே உற்சாகத்தோடும், மனக்களிப்போடும் முன்னேறிச் செல்லுவீர்களாக!

நினைவிற்கு:- “மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (எபி. 2:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.