No products in the cart.
டிசம்பர் 27 – கர்த்தர் எப்படிப்பட்டவர்?
“இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்” (லூக். 19:3).
“கர்த்தர் எப்படிப்பட்டவர்?” என்ற கேள்விக்கு பலரும் வெளிப்பார்வைக்குப் பலவிதமாய் பதிலளித்தாலும், அவர்கள் கர்த்தர் யார் என்பதைக் குறித்து உள்ளுக்குள் வேறு கருத்து வைத்திருக்கிறதைக் காண முடிகிறது. ஒரு தேவ ஊழியக்காரர், “தேவன் மிக அதிகமாக மின்சாரம் வருகிற கம்பியைப் போன்றவர். அவரோடு இணைந்து பழகவேண்டும். அலட்சியமாய் இருந்தால் அந்த மின்சார கம்பி நம்மைத் தூக்கி எறிந்துவிடும்” என்று சொன்னார். அவர் அப்படி சொல்லுவதற்கு, அவர் தன் வாழ்க்கையிலே சந்தித்த இழப்புகள் மற்றும் கசப்பான சம்பவங்கள்தான் காரணம்.
வேறொருவர் சொன்னார், “கடவுள் என்று எண்ணும்போதே என்னை ஒரு குற்ற உணர்வு வாட்டுகிறது. என் மரணத்திற்கு அப்பால் அவர் என்ன செய்வார் என்ற பயம் வாட்டுகிறது. அவரைக் குறித்து எண்ணும்போது, அவரது சந்நிதியில் நிற்க பெலனற்ற மனிதனாகவே காணப்படுகிறேன்” என்றார். அவர் அப்படிச் சொல்லுவதற்கு காரணம், அவருடைய வாழ்க்கையில் காணப்பட்ட மனச்சாட்சியை உறுத்துகிறதான பாவங்களே. இவை காரணமாக அவராலே முன்னேற முடியவில்லை. ஆகவேதான் கடவுளைக் குறித்து உள்ளுணர்விலே அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை வைத்திருந்தார்.
இன்னொரு சகோதரனுக்கு கர்த்தரைப்பற்றி சொன்னாலே கட்டுக்கடங்காத கோபம் வந்துவிடும். கர்த்தர் என்று ஒருவர் இருப்பாரென்றால், ஏன் இந்த உலகத்தில் இவ்வளவு இரத்தம் சிந்துதல், காரணமில்லாத மரணங்கள், பயங்கரமான யுத்தங்கள் என்று கேட்பார்? காரணம், அவர் சிறு வயதாயிருக்கும்பொழுது, ஒரு யுத்தத்திலே தன்னுடைய பெற்றோரைச் சாகக்கொடுத்ததினால் அவருடைய உள்ளத்தில் ஆழமான காயங்கள் இருந்தன. அந்தக் காயங்கள் கர்த்தரைக் குறித்து அறிந்துகொள்ளுவதற்கு அவருக்குத் தடையாய் இருந்தன.
வேதத்திலே, இயேசு எப்படிப்பட்டவரோ என்பதை அறிந்துகொள்ளும்படி சகேயு வகை தேடினார். இயேசுவின் அன்பு அவரைத் தொட்டபடியால், ஒரு பெரிய மாறுதல் அவருக்குள்ளே வந்தது. இயேசு தன்னுடைய உள்ளத்திலும், தன்னுடைய வீட்டுக்கும் வருவதற்கு எந்தத் தியாகமும் செய்ய அவர் ஆயத்தமாக இருந்தார். அநியாயமாய் வாங்கினவற்றை நான்கு மடங்காகத் திருப்பிக்கொடுக்கத் தீர்மானித்தார். கர்த்தர் பரிசுத்தராகையால் தன்னுடைய வாழ்க்கையும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருடைய உள்ளத்தில் வந்தது.
இயேசு உங்களுக்கு சிருஷ்டி கர்த்தராகவும், அன்பின் சிநேகிதராகவும், ஆத்தும நேசராகவும் இருக்கிறாரா? அவரை நீங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்து அன்புகூருகிறீர்களா? அப். பவுல் “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” (எபி. 11:6) என்று எழுதுகிறார்.
தேவபிள்ளைகளே, கர்த்தர் யார் என்பதை நன்கு அறிந்தவர்களாய் வாழுங்கள். அவரது குணாதிசயங்களை அறிந்தவர்களாய், அவருக்குப் பயந்து வாழுங்கள். நீங்கள் அவரைத் தேடும்பொழுது நிச்சயமாகவே அவர் உங்களுக்குப் பலனளிப்பார்.
நினைவிற்கு:- “என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 12:45, 14:9).
